கருணாநிதி மீது விமர்சனம்: நெடுமாறனுக்கு துரைமுருகன் கண்டனம்

நெடுமாறனை சரியான ஒரு பித்துக்குளி பேர் வழி என்று துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பழ.நெடுமாறன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். விபரம் தெரிந்தவர் என்று இது நாள் வரை நான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் தேனி நகரில் நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தில்,
'மகளுக்கு (கனிமொழி) அமைச்சர் பதவி வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுடன் கருணாநிதி பேச்சு வார்த்தைக்குச் சென்று விட்டார். குடும்ப நலனில் அவர் அக்கறை செலுத்துவதால், இப்பொழுது வைகை, பெரியாறு பாசன விவசாயிகள் பலியாகியுள்ளனர்' என்று பேசிய பேச்சை ஏட்டில் படித்த போது, பழ.நெடுமாறன் விபரம் தெரிந்தவர் அல்ல; சரியான ஒரு பித்துக்குளி பேர் வழி தான் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
கவிஞர் கனிமொழி எம்.பி.க்கு அமைச்சர் பதவி என்று எழுந்துள்ள விவாதங்களுக்கு, முற்றுப் புள்ளி வைப்பது போல் 'கனிமொழி அமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லை. அதற்காக அவசரப்படவுமில்லை' என்று முதலமைச்சர் கருணாநிதி எழுதியதற்கு பிறகும், இப்படி ஒரு கருத்தை பழ.நெடுமாறன் சொன்னால், அவரை எப்படி, விபரமறிந்த மனிதர் என்று சொல்ல முடியும்.
பழ.நெடுமாறன் வாதப்படியே முதலமைச்சர் கேரள அரசுடன், முல்லைப் பெரியார் அணை விவகாரம் குறித்து பேசுவதற்கும், கனிமொழி அமைச்சர் பதவிக்கு போவதற்கும் என்ன சம்பந்தம்? கேரள முதல்வர் அச்சுதானந்தனா கனிமொழிக்கு அமைச்சர் பதவி தருகிறவர்; அல்லது, கேரள முதல்வரின் ஒப்புதல் பெற்றா பிரதமர் மன்மோன் சிங்கும், சோனியாவும் அமைச்சர்களை நியமிக்கிறார்கள்.
'பிரதமர் மன்மோகன்சிங் பேச்சைக் கேட்டு கேரள அரசு விரித்த வலையில், முதலமைச்சர் கருணாநிதி சிக்கிக் கொண்டார்'. இதுவும் பழ.நெடுமாறன் பேசிய பேச்சில் ஒரு பகுதி.
அண்டை மாநிலங்களோடு ஏற்படும் பிரச்சனைகளைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது தவறு என்று எவரும் கூறமாட்டார்கள். ஆனால், பேச்சுவார்த்தையில், தமிழகத்தின் உரிமைகளை விட்டு விடக்கூடாது என்பது தான் முக்கியம்.
ஒரு நாட்டின் பிரதமர். அவர் ஒரு யோசனை கூறுகிறார், 'ஒரு முறை பேசிப்பாருங்கள். அதனால் தவறு இல்லை. மாறாக, நல்ல முடிவுக்கு இரு அரசும் வந்தால் நல்லது தானே' என்று கூறுகிறார்.
நியாயம் நம் பக்கம், நீதிமன்ற தீர்ப்புகளும் நம் பக்கம். பின் ஏன் பேச்சுவார்த்தைக்கு நாம் பயப்பட வேண்டும். எனவே, தான், பிரதமரின் யோசனைக்கு மதிப்பளிக்கின்ற நாகரீகத்தோடு முதலமைச்சர் கருணாநிதி கேரள முதல்வரோடு பேச்சுவார்த்தை நடத்த ஒத்துக்கொண்டு, அப்படியே பேச்சு வார்த்தையும் நடத்தினார்.
புதிய அணை கட்டுவது குறித்து கேரள சார்பில் பேச்சு துவக்கிய போதே அந்த கருத்தை தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக மறுக்கப்பட்டு விட்டது.
முல்லைப் பெரியார் அணையில், அதிகமாக நீர் கசிகிறது என்று கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கும், தமிழக அரசு சார்பில் தக்க பதில் அளித்து மறுக்கப்பட்டது.
இது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றபோது, முதலமைச்சர் கருணாநிதி, 'அணையில் நீர் கசிவு அதிகம் என்கிறது கேரளா. அதிகம் இல்லை என்கிறது தமிழகம். அணையில் நீர் கசிவு அதிகம் ஏற்படுவது சரியல்ல. எனவே, நீர் கசிவு அதிகம் உள்ளதா என்பதை கண்டறிய மத்திய அரசில் உள்ள மத்திய நீர் ஆணையம் மூலம், இரு மாநில பிரதிநிதிகளோடு, மற்ற மாநில வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்று பார்வையிட்டு, கூறுகின்ற கருத்தை இரு அரசும் ஏற்கலாம்' என்ற யோசனையை தெரிவித்தார்.
அணையில் நீர் கசிவு அதிகம் தான் உள்ளது என்று கேரள அரசு நினைத்திருந்தால், முதலமைச்சர் கருணாநிதி கருத்தை உடனே ஏற்று இருக்க வேண்டும். மாறாக, இந்த கருத்து குறித்து யோசனை செய்து பின்னர், எங்கள் கருத்தை தெரிவிக்கிறோம் என்று கூறி எழுந்து சென்று விட்டார்கள்.
இப்பொழுது பழ.நெடுமாறனை கேட்கிறேன். யார் விரித்த வலையில் யார் விழுந்தார்கள். இது தான் அன்று நடைபெற்ற சம்பவமே ஒழிய, 'சட்டத்திருத்தம் செய்து உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ள மனு மீதான விசாரணையில், தமிழக அரசுடன் பேச்சு நடத்தி வருவதாக கேரளம் தெரிவித்துள்ளது' என்றும் பழ.நெடுமாறன் பேசிய கருத்தும் சரி அல்ல. கேரள அரசு அப்படி கூறியிருந்தாலும் அது தவறு.
இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications