கருணாநிதியின் சுயநலம்-நெடுமாறன் தாக்கு
தேனி: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் தமிழக முதல்வர் கருணாநிதி சுய நலத்திற்காக விவசாயிகளின் உரிமையை விட்டுக் கொடுத்து கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.
தேனியில் முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்புக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் நெடுமாறன் பேசுகையில்,
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது என கேரள முதல்வர் அச்சுதானந்தன் பகிரங்கமாக கூறிவிட்டார். அப்போதே மத்திய அரசு அச்சுதானந்தன் அரசை டிஸ்மிஸ் செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எடுக்கவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தமிழக முதல்வரை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் பெரியாறு அணை பிரச்னையை தமிழக முதல்வர் கருணாநிதி கிடப்பில் போட்டு விட்டார். பேச்சுவார்த்தையில் என்ன நடந்ததோ.
உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாததால் கேரள அரசு மீது மீண்டும் வழக்கு போடப்பட்டுள்ளது. அதன்மீது தீர்ப்பை எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில், தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரளவில் அணைகள் பாதுகாப்பு தொடர்பாக சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த சட்டம் செல்லாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதையும் கிடப்பில் போட வேண்டும் என்ற நோக்கத்தில் கேரள அரசு விரித்த வலையில் கருணாநிதி அரசு விழுந்து விட்டது.
தனது மகளுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக, தன் சுய நலனுக்காக வைகை-பெரியாறு பாசன விவசாயிகளின் உரிமையை விட்டுக் கொடுத்துள்ளார் கருணாநிதி என்றார் நெடுமாறன்.
கனிமொழிக்கு அமைச்சர் பதவி தர காங்கிரஸ் தயாராக இல்லை என்று கூறப்படும் நிலையில், கம்யூனிஸ்டுகளின் ஆதரவுடன் அதைப் பெற கருணாநிதி முயல்கிறார் என்றரீதியில் நெடுமாறன் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதி மீது விமர்சனம்: நெடுமாறனுக்கு துரைமுருகன் கண்டனம்












Click it and Unblock the Notifications