முன்னாள் தமிழக அமைச்சர் ஒய்.எஸ்.எம். யூசுப் மரணம்
நெல்லை: எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஒய்.எஸ்.எம். யூசுப் மரணமடைந்தார்.
எம்ஜிஆர் அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தவர்
ஒய்.எஸ்.எம் யூசுப். இவர் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் இருந்து 1977ம் ஆண்டு தேர்தலில் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1983ம் ஆண்டு முதல் 1987 வரை மேல் சபை உறுப்பினர் பதவி வகித்தவர். அப்போது நீர்பாசன துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு யூசுப் தீவிர அரசியலில் இருந்து ஓதுங்கி இருந்தார். கடந்த ஆண்டு அவர் விஜயகாந்தின் தேமுதிகவில் சேர்ந்து நெல்லை கிழக்கு மாவட்ட அவைத் தலைவராக பணியாற்றி வந்தார்.
கடந்த 22ம் தேதி பெங்களுருக்கு சென்றுவிட்டு நேற்று காலை 8 மணிக்கு சொந்த ஊரான பணகுடிக்கு வந்தார். சிறுது நேரத்தில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
உடனடியாக அவரை நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இரவு 8 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான பணகுடிக்கு எடுத்து செல்லப்பட்டது. இன்று பிற்பகலில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
மறைந்த யூசுப்புக்கு ரஸியா பீவி என்ற மனைவியும், சபியா என்ற மகளும், ஆசம் என்ற மகனும் உள்ளனர்.
யூசுப் சட்டமன்ற உறுப்பினராவதற்கு முன்பு பணகுடி நகர பஞ்சாயத்து தலைவராகவும் இருந்து உள்ளார்.