விஷம் வைத்து 13 ஆடுகள் கொலை!
பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகே 13 ஆடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாவூர்சத்திரம் அருகில் உள்ள திப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் அரிசந்திரன். விவசாயியான இவர் 15 ஆடுகள் வளர்ந்து வந்தார். பகலில் காடுகளில் மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகள், இரவு வீட்டு தொழுவத்தில் கட்டப்படுவது வழக்கம்.
நேற்று இரவு கட்டப்பட்டிருந்த ஆடுகளை இன்று அதிகாலை பார்த்தபோது 13 ஆடுகள் தொழுவத்தில் இறந்து கிடந்தன. மற்ற 2 ஆடுகளை காணவில்லை. அதோடு வீட்டின் முன் நிறுத்தியிருந்த டிராக்டர் பேட்டரியும் திருட்டு போய் இருந்தது.
யாரோ விஷமிகள் தான் ஆடுகளுக்கு விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என தெரிகிறது. இதுபற்றி அரிசந்திரன் பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். ஒரே நேரத்தில் 13 ஆடுகள் செத்து கிடப்பதை பார்த்து அரிசந்திரன் குடும்பத்தினர் மட்டுமின்றி பொதுமக்களும் கண்ணீர் விட்டனர்.
ஏற்கனவே இந்த பகுதியில் மர்ம நோயால் மாடுகள் பலியான சோகத்தில் முழ்கியிருக்கும் மக்களிடையே ஆடுகள் விஷம் வைத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.