தென்காசி-குண்டு வெடித்த இடங்களில் சென்னை நிபுணர்கள் சோதனை
தென்காசி: தென்காசியில் பைப் வெடிகுண்டுகள் வெடித்த ஆர்எஸ்எஸ் அலுவலகம் மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நடந்த இந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக இதுவரை சரியான துப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னையிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் டி.எஸ்.பி ஆசீர் விஜயகுமார் தலைமையில் தென்காசி வந்துள்ளனர். இந்தக் குழு சம்பவங்கள் நடந்த இரு இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து நெல்லை சரக டிஐஜி கண்ணப்பனிடம் கேட்டபோது, எந்த வகையான வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டது, அதன் தன்மை என்ன, எவ்வாறு வெடிக்க செய்யப்பட்டது, இது போன்ற குண்டு வேறு எங்கு பயன்படுத்தப்பட்டது என்பது போன்ற விவரங்கள் தெளிவாக இல்லை. இதனால் சென்னை தடய அறிவியல் பரிசோதனை கூடத்தின் உதவி நாடப்பட்டுள்ளது என்றார்.
சிபிசிஐடி விசாரணைக்கு தமுமுக கோரிக்கை:
இந் நிலையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஐவாஹிருல்லாஹ் விடுத்துள்ள அறிக்கையில்,
கலவர சம்பவங்களுக்கு பின் மெல்ல அமைதி திரும்பி வரும் தென்காசியில் சங்பரிவார் அலுவலகம் ஒன்றின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சேதம் ஏதுவும் ஏற்படாதது ஆறுதல் அளித்தாலும், இச்செயலை செய்த விஷமிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
இந்து, முஸ்லிம் சகோதரர்களும் பொது நலன் கருதி அமைதியாகவும், நிதானத்தையும், மேற்கொண்டு உண்மை குற்றவாளிகள் பிடிபட ஒத்துழைக்க வேண்டும். தென்காசி நகர கடந்த கால நடவடிக்கைகள் கசப்பான அனுபவத்தை தந்திருப்பதால் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.