'கட்' அடித்தால் வீட்டுக்கு எஸ்.எம்.எஸ்.-மாணவர்களுக்கு பள்ளிகள் கிடுக்கிப்பிடி!
சென்னை: மாணவ, மாணவியர் வகுப்புகளுக்கு வராமல் கட் அடித்தால், அவர்களது பெற்றோருக்கு உடனடியாக எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் கொடுக்கும் முறையை சென்னை நகரில் உள்ள சில பள்ளிகள் அமல்படுத்தியுள்ளன. இதனால் மாணவர்கள் கட் அடிப்பது வெகுவாக குறைந்துள்ளதாம்.
பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர் அவ்வப்போது வகுப்புகளைக் கட் அடித்து விட்டு சினிமாவுக்குப் போவதும், ஜாலியாக ஊர் சுற்றுவதும் காலம் காலமாக இருந்து வருவதுதான்.
ஆனால் தற்போது இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம் இன்றைய உலகின் கவர்ச்சிகரமான பல அம்சங்கள்தான்.
இதைத் தடுக்க சென்னை நகரின் சில பள்ளிகளில் புதிய முறை ஒன்றை அமல்படுத்தியுள்ளனர். மாணவர்கள் வகுப்புகளுக்கு கட் அடித்தால் உடனடியாக அவர்களது பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவித்து விடுகிறதாம் பள்ளி நிர்வாகங்கள்.
இன்று உங்களது மகன் மகள் பள்ளிக்கு வரவில்லை என்று ரத்தினச் சுருக்கமாக அந்த செய்தி கூறுகிறது. இதனால் தங்களது மகன் அல்லது மகளை பெற்றோர்கள் கண்டிக்க வழி ஏற்படுகிறது.
இதற்கு மட்டும் இல்லாமல், பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை விடப்பட்டால், மழை அல்லது வேறு காரணங்களுக்காக பள்ளி விடுமுறை என்றால் அல்லது மாணவ, மாணவியரின் பழக்க வழக்கத்தில் வித்தியாசம் தென்பட்டால் என பல்வேறு காரணங்களுக்காவும் இந்த எஸ்.எம்.எஸ். முறையை பள்ளி நிர்வாகங்கள் கடைப்பிடித்து வருகின்றன.
சமீபத்தில் ஒரு பள்ளியின் சமையல் கூடத்தில் காஸ் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. உடனடியாக அனைத்து மாணவர்களின் வீடுகளுக்கும் எஸ்.எம்.எஸ். தகவலை பள்ளி நிர்வாகம் அனுப்பியது. இதையடுத்து பெற்றோர்கள் விரைந்து வந்து தங்களது பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த எஸ்.எம்.எஸ். முறை மிகவும் உபயோகமாக இருப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். பிள்ளைகள் சரியாக பள்ளிக்கூடங்களுக்குப் போகிறார்களா, முறையாக படிக்கிறார்களா என்பதை பள்ளிக்குப் போகாமலேயே நமது இருப்பிடத்திலிருந்தபடியே அறிந்து கொள்ள இது உதவுவதாக அவர்கள் கூறுகின்றனர்.