புதுச்சேரியில் காங்கிரஸ் கோஷ்டி மோதல்-அனல் பறக்கிறது
புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது போல, மிகச் சிறிய மாநிலமான புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஏகப்பட்ட கோஷ்டிகள் உண்டு. இருந்தாலும் பிரதானமாக இருப்பது முதல்வர் ரங்கசாமி மற்றும் முன்னாள் மாநிலத் தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான நாராயணசாமியின் கோஷ்டிகள்தான்.
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு திமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகின்றன.
முதல்வர் ரங்கசாமி தலைமையில் வைத்தியலிங்கம், வல்சராஜ், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணராவ் மற்றும் ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர். கடந்த சில காலமாக இவர்கள் 5 பேருக்கும் முதல்வருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
ரங்கசாமியின் செயல்பாட்டில் அதிருப்தி தெரிவித்துவரும் நாராயணசாமி இந்த அமைச்சர்களை ஒருங்கிணைத்து போட்டி அரசியல் நடத்தி வருகிறார்.
இந் நிலையில் புதுச்சேரியில் ரூ.250 கோடியில் அரசு மருத்துவக்கல்லூரி துவங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான குழுவில் தங்களை நியமிக்கவில்லை என்று கூறி அமைச்சர்கள் அனைவரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன் கூண்டோடு பெங்களூர் வந்த அவர்கள் புதுச்சேரி காங்கிரஸ் பொறுப்பாளரை சந்தித்து முதல்வர் ரங்கசாமியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து டெல்லிக்கும் சென்று முதல்வரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அமைச்சர்களின் இந்த செயலுக்கு நாராயணசாமி தான் என முடிவெடுத்த ரங்கசாமியின் ஆதரவாளர்கள் கடந்த 2 நாட்களாக பல இடங்களில் நாராயணசாமியின் உருவ பொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து உருவ பொம்மையை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நாராயணசாமியின் ஆதரவாளர்கள் டிஜிபி கானை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதேபோல் அமைச்சர்களும், ஆளுநர் முகுத்மிதியை சந்தித்து உருவ பொம்மை எரிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரினர்.
இதைத் தொடர்ந்து நாராயணசாமியின் உருவ பொம்மையை எரித்த முதல்வர் ரங்கசாமியின் ஆதரவாளர்கள் 300 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சண்முகம் கூறியதாவது, கொடும்பாவி எரிப்பவர்கள் காங்கிஸ் கட்சிக்காரர்களே இல்லை. நான் வரும் 30ம் தேதி டெல்லி செல்ல உள்ளேன். கட்சி மேலிடம் கேட்டால் இங்குள்ள நிலவரம் குறித்து எடுத்துரைப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications