சென்னையில் 4 இலங்கைத் தமிழர்கள் கைது - புலிகளா?
சென்னை: சென்னையில் சந்தேகத்திற்கு உரிய வகையில் தங்கியிருந்த நான்கு இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் ஆங்காங்கே இலங்கைத் தமிழர்கள் பலர் கைதாகி வருகின்றனர். இவர்களில் பலர் போலி பாஸ்போர்ட்டுடன் வந்து தங்கியவர்கள். சிலருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதாக தெரிய வந்தது.
சென்னை, மடிப்பாக்கத்தில் கடந்த வாரம் விடுதலைப்புலிகளின் உளவு அமைப்பைச் சேர்ந்த தம்பிதுரை பரமேஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக 8 இலங்கை தமிழர்களும் கைதானார்கள்.
இந்த நிலையில், பெரம்பூரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 4 இலங்கை தமிழர்கள் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து துணை ஆணையர் சம்பத் மேற்பார்வையில் உதவி ஆணையர் ராஜாராம் தலைமையிலான தனிப் படை போலீசார் நேற்று அதிகாலை பெரம்பூர் காமராஜர் சாலை 7வது தெருவில் வீடு எடுத்து தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவரஞ்சன் (வயது 22), ஜெரால்டு விஜயேந்திரன் (வயது 24), திரிகோணமலையைச் சேர்ந்த கிரிலயன் (வயது 25), உமா மகேஸ்வரன் (வயது 25) ஆகியோரைக் கைது செய்தனர்.
சிவரஞ்சனும், ஜெரால்டு விஜயேந்திரனும் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் தங்களை இலங்கை அகதிகளாக பதிவு செய்துள்ளனர். இவர்களிடம் போலி பாஸ்போர்ட் இருந்தது தெரிய வந்தது. கிரிலயன் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இலங்கை அகதியாக பதிவு செய்துள்ளார். ஆனால் வேறு பெயரில் பதிவு செய்துள்ளார்.
இந்த மூவரும் 10 மாதங்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளனர். ஆனால், உமா மகேஸ்வரன் ஒரு வாரத்திற்கு முன்புதான் சென்னைக்கு வந்துள்ளார். ஆனால், அவர் எந்த காவல்நிலையத்திலும் தன்னை பதிவு செய்து ள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவருடைய பாஸ்போர்ட் மற்றும் விசா பறிமுதல் செய்யப்பட்டது.
வேறு பகுதிகளைச் சேர்ந்த காவல்நிலையங்களில் அகதிகளாக தங்களை பதிவு செய்து கொண்டவர்கள் செம்பியம் காவல்நிலைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் வீடு எடுத்து தங்கி இருப்பது ஏன்? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.
உமா மகேஸ்வரன் சென்னைக்கு வந்து ஒரு வாரம் ஆகியும் அவர் இன்னும் தன்னை காவல்நிலையத்தில் பதிவு செய்து கொள்ளாதது ஏன்? என்பது குறித்தும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இவர்களுக்கு புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருக்கிறதா அல்லது விடுதலைப்புலிகளுக்கு அவர்கள் உதவி வருகிறார்களா அல்லது இங்குள்ள தலைவர்களின் நடமாட்டங்களை வேவு பார்க்க வந்தவர்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications