ஜெயலலிதா மீண்டும் நடிக்கப் போக வேண்டும்: பாலு
சென்னை: சேது சமுத்திரத் திட்டத்திற்காக நான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருப்பது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. அவர் அரசியலிலிருந்து விலகி மீண்டும் நடிக்கப் போக வேண்டும் என்று மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
சமீபத்தில் டி.ஆர்.பாலுவை கடுமையாக விமர்சித்து ஜெயலலிதா அறிக்கை விட்டிருந்தார். பாலு என்ன மெரைன் என்ஜீனியரா, எந்தக் கல்லூரியில் படித்தார் என்று முதல்வர் கருணாநிதி ஸ்டைலில் பாலுவை விமர்சித்திருந்தார்.
இதற்கு டி.ஆர்.பாலு மிகக் கடுமையான பதிலுடன் ஒரு அறிக்கை விட்டுள்ளார். அதில், ஜெயலலிதாவின் அறிக்கையை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. புறக்கணிக்கப்பட வேண்டிய அறிக்கை அது.
சேது கால்வாய் வழியாக சிறிய கப்பல்கள் மட்டுமே போக முடியும். பெரிய கப்பல்களுக்கு அது பலன் அளிக்காது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியும், கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தாவும் கூறியிருப்பதாக தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார் ஜெயலலிதா.
2006-07ல் நாட்டில் உள்ள 12 துறைமுகங்களுக்கு 20 ஆயிரத்து 864 கப்பல்கள் வந்துள்ளன. இவற்றில் 4,422 கப்பல்கள் மட்டுமே 50 ஆயிரம் டன்களுக்கும் அதிக எடை கொண்டவை. மீதமுள்ள 16 ஆயிரத்து 422 கப்பல்களும் 50 ஆயிரம் டன் எடைக்கும் குறைவானவைதான்.
சேது கால்வாய் திட்டம் முடிவடைந்ததும், இந்தக் கால்வாய் வழியாக 16 ஆயிரத்து 422 கப்பல்களும் செல்ல முடியும். இந்தக் கப்பல்களின் பயண நேரத்திலிருந்து 424 கடல் மைல் தூரம் குறையும். இதனால் அவற்றுக்கான எரிபொருள் தேவை குறையும்.
நான் என்னை மெரைன் என்ஜீனியரா என்று கேட்டுள்ளார் ஜெயலலிதா. ஒருவரின் திறமையை அவரது படிப்பை வைத்துத்தான் அளவிட வேண்டும் என்றால், படிப்பை வைத்துத்தான் ஒரு அமைச்சர் செயல்பட வேண்டும் என்றால், முதலில் முன்னாள் நடிகையான ஜெயலலிதா அரசியலிருந்து விலகி மீண்டும் நடிக்கப் போக வேண்டும்.
திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும், மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜெயலலிதாவின் வழக்கமாகி விட்டது என்று கூறியுள்ளார் டி.ஆர்.பாலு.
சேது திட்டத்தை நிறைவேற்றுவோம்:
இந் நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாலு, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. சில மதவாத சக்திகள் இத் திட்டத்தை முறியடிக்க முயல்கின்றன. இந்தக் கும்பல்களின் திட்டத்தை மக்கள் உணர்ந்து கொண்டு அவர்களை முறியடிக்க வேண்டும் என்றார்.