புலிகளை ஆதரிப்போர் மீது நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கிருஷ்ணசாமி கடிதம்
சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகள், அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் கருணாநிதிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது,
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், இந்திய நாட்டின் பிரதமராகவும் இருந்து அனைத்து மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பெற்ற அன்னை இந்திரா காந்தியின் மகனும், எங்கள் தலைவி அன்னை சோனியா காந்தி கணவருமான எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியை நம் தமிழ் மண்ணில் கொலை செய்யப்பட்டதை நாடு என்றென்றும் மறவாது.
இந்த படுகொலைக்கு காரணம் விடுதலைப் புலிகள் தான் என்ற அடிப்படையில் அந்த இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை எந்த ரூபத்தில் யார் ஆதரித்தாலும்
அதை அனுமதிக்க முடியாது என்ற நிலை தமிழகத்தில்
காவல்துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக ஒரு சில அரசியல் மற்றும் அரசியல் சாரா இயக்கங்கள் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், எங்களை கொச்சைப்படுத்தியும், பொதுக் கூட்டங்களும், பத்திரிக்கை செய்திகள் மூலமாகவும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த நிகழ்வுகள் அத்தனையும் எங்கள் கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்ல. பொதுமக்கள் மத்தியிலும் ஆழ்ந்த மனவருத்தத்தையும், எரிச்சலையும் உண்டாக்கியிருக்கிறது. எங்களின் மூத்தத் தலைவர்களும் மன வருத்தத்தில் உள்ளனர்.
எனவே இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அக்கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications