மு.க.அழகிரியின் நண்பர் வீட்டில் நர்ஸ் மர்ம சாவு
மதுரை: முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் நண்பருடைய வீட்டில், வேலைக்கு வந்த நர்ஸ் மர்மமான முறையில் இறந்தது சர்ச்சையை எழுப்பியுள்ளது. தங்களது மகள் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்தவர் நாகேஷ். டி.வி.எஸ். நகரில் வசித்து வருகிறார். இவர் ஒரு தொழிலதிபர். மு.க.அழகிரியின் மிக நெருங்கிய நண்பர்.
நாகேஷின் தாயார் தங்கம்மாளுக்கு உடல் நலம் சரியில்லை. இதையடுத்து அவரைக் கவனித்துக் கொள்வதற்காக தனியார் மருத்துவமனை ஒன்றை நாடி நர்ஸ் ஒருவரை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அந்த மருத்துவமனை நிர்வாகம் கற்பகவள்ளி (21) என்ற நர்ஸை ஏற்பாடு செய்தது. கற்பகவள்ளி தினசரி காலை வீட்டுக்கு வந்து நாகேஷின் தாயாரைப் பார்த்துக் கொள்வார். மாலையில் திரும்பிச் செல்வார்.
நேற்று காலையும் வழக்கம் போல கற்பகவள்ளி வேலைக்கு வந்தார். காலை 9 மணியளவில் அவர் குளியலறைக்குச் சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியம் வரவில்லை. இதையடுத்து நாகேஷின் குடும்பத்தினர் கண்ணாடி ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, கற்பகவள்ளி தூக்கில் தொங்கியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. துணை ஆணையர் ராமராஜன் விரைந்து வந்து கற்பகவள்ளியின் உடலைக் கைப்பற்றி உடனடியாக பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில், கற்பகவள்ளியின் பெற்றோருக்கு பிற்பகல் வாக்கில்தான் அவரது மரணச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அலறி அடித்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஓடி வந்த அவர்கள் கதறி அழுதனர்.
பொங்கலுக்குப் பிறகு வேலைக்குப் போக விரும்பவில்லை என்று கற்பக வள்ளி கூறி வந்தாராம். ஆனால் மருத்துவமனை நிர்வாகம்தான் கட்டாயப்படுத்தி நாகேஷ் வீட்டுக்குப் போக வைத்ததாம். ஆனால் இப்போது அவர் இறந்து போய் விட்டதாக போலீஸார் கூறுகிறார்கள்.
இந்த சாவில் பெரிய மர்மம் உள்ளது. போலீஸாரும், நாகேஷ் குடும்பத்தினரும் எதையோ மறைக்கப் பார்க்கின்றனர். இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என கற்பகவள்ளியின் தந்தை சுந்தரராஜன் கூறியுள்ளார்.
சுந்தரராஜன் குடும்பத்தினரும், உறவினர்களும் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் குதித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இளம் நர்ஸின் தற்கொலை மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.