தமிழகத்திற்குள் பிரபாகரன் ஊடுருவவில்லை - டி.ஜி.பி. விளக்கம்
சென்னை: தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் ஊடுருவவில்லை என தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன் கூறியுள்ளார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற கடும் சண்டையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுவதற்காக கள்ளத்தோணி மூலம் ராமேஸ்வரம் வந்து பின்னர் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் பரவியது.
இதனையடுத்து கியூ பிரிவு போலீசார் அனைத்து அகதிகள் முகாம்கள், ராமேஸ்வரம் பகுதியில் உள்ள தீவுகள் மற்றும் கோவையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படும் மருத்துவமனை ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். ஆனால் அத்தகவல் கடைசியில் வெறும் வதந்தி எனத் தெரியவந்தது.
இது குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் கூறுகையில், இலங்கையில் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழக கடலோரப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் ஊடுருவலை தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் யாரும் தமிழகத்தில் இது வரை ஊடுருவவில்லை.
தமிழ்நாட்டில் இருந்து படகுகள் மூலம் மருந்துகள், உலோகங்கள், வெடி பொருட்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் கடத்தலை தடுக்க கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரமாக்கப் பட்டுள்ளது.
இதற்காக தமிழக கடலோர மாவட்டங்களில் 12 முக்கிய இடங்களில் நவின தகவல் தொடர்பு வசதிகளுடன் கூடிய அதிநவீன ரோந்து படகுகள், மிதக்கும் காவல் நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக நெல்லை மாவட்டம் தருவைக்குளம், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆகிய இடங்களில் கடலோர காவல் நிலையங்கள் அமைக்கும் பணி விரைவில் நிறைவடையும்.
காவல் துறையின் கடலோர காவல் பிரிவு போலீசார் இந்த போலீஸ் நிலையங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தீவிரவாதிகளுக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஆயுதங்களை கடத்த உதவும் கும்பல் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 120 அகதிகள் முகாம்களிலும் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. முகாம்களில் தங்கி இருக்கும் அகதிகள் அந்தந்த காவல் நிலையங்களில் சரியான பெயர்களை பதிவு செய்துள்ளார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.
போலீசாரின் இத்தகைய கண்காணிப்பால் தீவிரவாதிகளின் ஊடுருவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார் டிஜிபி.












Click it and Unblock the Notifications