தாயின் உடல் பருமனும் குழந்தையும்!
சிட்னி: உடல் பருமனுடைய பெண்களுக்கு கொழுக் மொழுக் என குழந்தைகள் பிறக்கும் என ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வுக் குழுவின் தலைவரான மார்கரெட் மோரிஸ் கூறுகையில், கர்ப்பத்திற்கு முன்பு உடல் பருமனுடன் கூடிய பெண்களுக்கு நிச்சயம், பருமனான குழந்தைகள்தான் பிறப்பார்கள்.
தாயாரின் உடல் அமைப்புதான் குழந்தைகளுக்கும் இருக்கும். கர்ப்பிணிகள், கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகள், குழந்தைகளின் மூளை நரம்பமைப்புகளை பாதிக்கும்.
கர்ப்ப காலத்தின்போது கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அதிக எடையுடன் கூடியதாக, கொழுப்புச் சத்து நிறைந்தவையாகவே இருக்கும்.
எனவே கர்ப்பம் தரிக்கும் முன்பே உடல் எடையைக் குறைக்க பெண்கள் முயல வேண்டும். மேலும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது. குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என ஒருபோதும் நினைக்கவே கூடாது. அளவான டயட்டைக் கடைப்பிடிப்பது அவசியம் என்றார் அவர்.
அதிக எடையுடன் கூடிய பெண் எலிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கர்ப்பம் தரித்த பெண் எலிகளுக்கு கொழுப்புச் சத்துடன் கூடிய உணவுகளும், சாதாரண எடை கொண்ட பெண் எலிகளுக்கு கொழுப்புச் சத்து இல்லாத உணவுகளும் கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
இந்த சோதனையில், கொழுப்பு சத்து தரப்பட்ட பெண் எலிகளுக்கு பிறந்த எலிக் குஞ்சுகள் அதிக எடையுடன் கூடியதாக இருந்ததாம். மேலும், இந்த குஞ்சுகள் வளர்ந்தபோது, அவற்றுக்கு சர்க்கரை நோயும் உண்டானது ஆய்வில் தெரிய வந்தது.