ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை
வாஷிங்டன்: யுரேனியம் தயாரிப்பை உடனடியாக நிறுத்துமாறும், அணு ஆராய்ச்சி குறித்த தனது நடவடிக்கைகளை வெளியுலகுக்கு முழுமையாக தெரிவிக்க வேண்டும் என்றும் ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க காங்கிரஸ் சபையில் உரையாற்றிய அவர்,
அமெரிக்காவுக்கு எதிராக சக்திகளை வலுவுடன் தொடர்ந்து எதிர்கொள்வோம். அமெரிக்க ஆதரவு நாடுகளுக்கு துணை நிற்போம். வளைகுடாவில் உள்ள அமெரிக்காவுக்கு முக்கியமான இடங்களை பாதுகாப்போம்.
அல்-கொய்தா தப்பியோடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இராக்கில் இன்னும் மோதல் முடிவுக்கு வரவில்லை. அங்கு அமெரிக்கப் படைகளுக்கு வெற்றி கிடைத்தாலும் எதிரிகள் இன்னும் பலமிழக்கவில்லை. இதனால் இராக்கில் இந்த ஆண்டும் சண்டை தொடரலாம். இறுதியில் தீவிரவாதிகளை அமெரிக்கா வென்று காட்டும்.
நியூயார்க் தாக்குதலுக்குப் பின் தீவிரவாதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறோம். இது தொடரும். அமெரிக்காவின் எதிரிகளுக்கு தொடர்ந்து பாடம் கற்பிப்போம்.
யுரேனியம் தயாரிப்பை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும். அணு ஆராய்ச்சி குறித்த தனது நடவடிக்கைகளை வெளியுலகுக்கு முழுமையாக தெரிவிக்க வேண்டும், தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருவதை கைவிட வேண்டும்.
அமெரிக்க பொருளாதாரத்தில் தேக்கம் உருவாகியிருப்பது உண்மை தான். உணவுப் பொருட்கள், எரிபொருளின் விலைகள் உயர்ந்துள்ளன. வேலையின்மையும் அதிகரித்துள்ளது. வீட்டுக் கடன்களால் ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து வங்கிகள் இன்னும் மீள முடியவில்லை.
பொருளாதாரம் மேலும் சீர்குலைவதைத் தடுக்க உடனடியாக 150 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிதியை அரசுக்கு ஒதுக்க காங்கிரஸ் (நாடாளுமன்றம்) உடனடியாக முன் வர வேண்டும் என்றார்.