மகாத்மா காந்தியின் கடைசி அஸ்தி இன்று கரைப்பு
மும்பை: மகாத்மா காந்தியின் கடைசி அஸ்திக் கலசம் இன்று அரபிக் கடலில் கரைக்கப்படுகிறது.
மகாத்மா காந்தி, 1948ம் ஆண்டு, ஜனவரி 30ம் தேதி டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று அவரது 60வது ஆண்டு நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
காந்தியின் மறைவுக்குப் பின்னர் அவரது அஸ்தி நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆறுகள், நதிகளில் கரைக்கப்பட்டன. ஒரே ஒரு அஸ்திக் கலசம் மட்டும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
அந்த அஸ்தியை 60 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அரபிக் கடலில் கரைக்கவுள்ளனர்.
இந்த அஸ்திக் கலசம், மகாத்மா காந்தி கடைசியாக வாழ்ந்த தெற்கு மும்பையில் உள்ள மணி பவனில் வைக்கப்பட்டுள்ளது.
கடலில் கரைக்கப்படவுள்ளதால் அஸ்திக் கலசத்திற்கு நேற்று ஏராளமான மாணவ, மாணவியர், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் திரண்டு வந்து கடைசி மரியாதை செலுத்தினர்.
மகாத்மா கொல்லப்பட்ட பின்னர் அவரது அஸ்தி, 1948ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி நாடு முழுவதும் உள்ள ஆறுகள், கடல்களில் கரைக்கப்பட்டது. இருப்பினும் சில அஸ்திக் கலசங்களை கரைக்காமல் அவரது தீவிர ஆதரவாளர்கள் தங்களுடன் வைத்துக் கொண்டனர்.
அப்படி ஒரு அஸ்திக் கலசம் 1997ம் ஆண்டு புவனேஸ்வர் வங்கி ஒன்றின் லாக்கரில் இருந்தது. பின்னர் அது அலகாபாத்தில் கரைக்கப்பட்டது. இன்னொரு கலசம் மணி பவனில் இருந்தது. இதை பிரபல தொழிலதிபர் ஜம்னாலால் பஜாஜின் பேரன் பரத் நாராயணன் என்பவர் மணி பவனில் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.