திருப்பதி கோவிலில் முடி பாதுகாப்புக்கு தனி பிரிவு
திருமலை: திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பக்தர்கள் நேர்த்திக் கடனாக கொடுக்கும் தலைமுடியை பாதுகாக்க தனியாக ஒரு பிரிவை உருவாக்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தேவஸ்தான தலைவர் கருணாகர ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திருப்பதி கோவில் தேவஸ்தான அதிகாரிகள் கூட்டத்தில் ஏழுமலையானுக்கு பக்தர்கள் கொடுக்கும் தலைமுடியை பாதுகாக்க தனியாக ஒரு அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் நேர்த்திக் கடனாக கொடுக்கும் தலைமுடியின் மூலம் ஆண்டுக்கு ரூ.200 கோடி வருமானம் கிடைக்கிறது. இந்த தொகை ஆண்டு முழுவதும் கிடைக்கும் உண்டியல் தொகையில் 50 சதவீதம் ஆகும்.
ஏழுமலையான தரிசிக்க வைகுண்டம் கியூ காம்பளக்ஸில் காத்திருக்கும் பக்தர்களின் வசதிக்காக ரூ.10.65 கோடி மதிப்பில் 30 பிளாஸ்மா டிவிக்கள் பொருத்தப்படும்.
திருமலையில் பக்தர்களின் வசதிக்காக மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படும். நடமாடும் மருத்துமனைகள் ஒவ்வொரு 500 மீட்டர் தூரத்திலும் அமைக்கப்படும்.
கல்யாணமஸ்து திட்டத்தின் 3வது கட்டம் நிறைவேற பக்தர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இது மார்ச் 9ம் தேதி நடைபெறவுள்ளது.
மேலும் சதுர்யுக பந்தனம் அத்யத்மிக பக்தி சைதன்ய யாத்ரா, நரசிம்ம ரதம் பிப்ரவரி 4ம் தேதி சிம்மாச்சலத்தை அடையும். மொவ்வா கோவிலில் பிப்ரவரி 9ம் தேதி கிருஷ்ண ரதம் முடிவடையும். ஸ்ரீ ராம ரதம் பத்ராச்சலத்தில் பிப்ரவரி 14ம் தேதி நிறைவடையும் என்றார் அவர்.