கண்டியில் ஜூலை 27ம் தேதி சார்க் உச்சி மாநாடு
கொழும்பு: இலங்கையின் கலாச்சார நகரான கண்டியில் ஜூலை 27ம் தேதி தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அதிபர் ராஜபக்சே நேரில் சென்று மேற்பார்வையிட்டார்.
கண்டியில் ஜூலை 27ம் தேதி தொடங்கும் சார்க் மாநாடு, ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெறுகிறது.
மாநாட்டு ஏற்பாடுகளை நேரில் பாரவையிட அதிபர் ராஜபக்சே கண்டிக்கு வந்து ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அனைத்து ஏற்பாடுளும் குறித்த காலத்திற்குள் முடிவடைய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பலப்படுத்த அவர் உத்தரவிட்டார்.
விடுதலைப் புலிகளுடன் ராணுவம் நடத்தி வரும் சண்டை உக்கிரமடைந்துள்ள பின்னணியில் சார்க் மாநாடு நடைபெறுவதால் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட அனைத்து சார்க் நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மாநாட்டையொட்டி கண்டி முழுவதும் அழகுபடுத்தப்படுகிறது. அங்குள்ள சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படுகின்றன. பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டில் சார்க் நாடுகளைச் சேர்ந்த 1000 பிரதிநிதிகள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர 300க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் குழுவும் மாநாட்டில் கலந்து கொண்டு செய்தி சேகரிக்கவுள்ளது.
மாநாட்டையொட்டி கொழும்பிலிருந்து கண்டிக்கு சிறப்பு ரயில்களும் விடப்படவுள்ளன.