குடும்பமே இல்லாத ஜெயலலிதா - மு.க.அழகிரி
மதுரை: திமுகவில் குடும்ப அரசியல் இருப்பதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். ராமதாஸ், விஜய்காந்த், சரத்குமார் ஆகியோர் குடும்பங்களை விட்டுவிட்டா அரசியல் நடத்துகின்றனர் மு.க.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று அழகிரியின் 57வது பிறந்த நாளையொட்டி தென் மாவட்டங்களில் திமுகவினர் பல கோவில்களில் அவரது ஆதரவாளர்கள் சிறப்பு பூஜைகளையும், அபிஷேகங்களையும் செய்தனர்.
முன்னதாக அழகிரிக்கு இன்று காலையில் தொலைபேசி மூலம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார் முதல்வர் கருணாநிதி. பின்னர் தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் சேர்ந்து கேக் வெட்டினார்.
அவருக்கு வாழ்த்து சொல்ல திமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் குவிந்தனர். பின்னர் கட்சித் தொண்டர்கள் சூழ அண்ணாத்துரை சிலைக்கு மாலை அணிவித்த அழகிரி, ஏழை மக்களுக்கு பல லட்சம் மதிப்புள்ள உதவிகள் அளித்தார்.
நேற்றுக செய்தியாளர்களிடம் அழகிரி கூறியதாவது:
நான் திமுகவுக்கு நல்லது செய்து வருகிறேன். மக்களுக்கும், தொண்டர்களுக்கு நல்லது செய்கிறேன். பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரது பிறந்த நாட்களில் ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறேன். இதற்காக என்னை முதல்வரே பாராட்டியுள்ளார்.
என் மகனை பொறுத்தவரை அவர் என்னை போலவே திமுகவுக்கு தொண்டனாகவே இருக்க விரும்புகிறார்.
மதுரை மேற்கு தொகுதியில் உள்ள நெசவாளர்களின் பிரச்சனை குறித்து அமைச்சர் ராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவரும் நெசவாளர் பிரச்சனையை தீர்த்து வைப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் மீண்டும் பேசுவேன்.
என் மகள் கயல்விழிக்கு எம்.பி. பதவி கொடுப்பதாக எழுந்துள்ள செய்தி தவறு. அவரின் திறமை இப்போதுதான் வெளியே வர ஆரம்பித்துள்ளது. 1989ல் கல்லூரியில் படிக்கும்போதே கவிதை எழுதி தாத்தாவின் (முதல்வர் கருணாநிதி) பாராட்டை பெற்றவர் கயல்விழி.
அவரின் கவிதை திறமையை மதுரையில் நடைபெறவுள்ள மலர் வெளியீட்டு விழாவில் நீங்களே பார்க்கலாம்.
திமுகவில் குடும்ப அரசியல் என பலர் குற்றம் சாட்டுகிறார்கள். மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்தே குடும்ப அரசியல் பற்றி பேசி வருகிறார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் அவரது மகனை விட்டுவிட்டா அரசியல் நடத்துகிறார். நடிகர் சரத்குமார் கட்சியின் மாநாட்டுக்கு அவரது மனைவி ராதிகா சரத்குமார் தான் அடிக்கல் நாட்டினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி மற்றும் மைத்துனர்களை (சுதீஷ்) வைத்துதான் அரசியல் நடத்துகிறார்.
ஜெயலலிதாவுக்கு குடும்பமே கிடையாது.
என் பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்டு கட்-அவுட்டுகள், பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள் தொண்டர்களின் ஆர்வ மிகுதியால் வைக்கப்பட்டுள்ளன. இதை ஒன்றும் செய்ய முடியாது என ஏற்கனவே கூறிவிட்டேன். தொண்டர்களின் ஆர்வமிகுதி தான் இதற்கு காரணம்.
திரையுலகில் பின்னணி பாடகராக இருந்து முடிசூடா மன்னனாக விளங்கிய டி.எம்.செளந்திரராஜனுக்கு வருகிற மார்ச் மாதம் பாராட்டு விழா நடத்த முடிவு செய்துள்ளேன்.
இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி, டைரக்டர் ராம.நாராயணன், டைரக்டர் பாலசந்தர், கவிஞர் வைரமுத்து உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
டி.எம்.செளந்திரராஜன் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அண்ணா காலத்திலேயே தேர்தல் பிரச்சாரத்திற்கு அவரை அழைத்தபோது அவர் வரவில்லை. இப்போதும் அவர் கட்சிக்கு அப்பாற்பட்டு இருக்கிறார். அவர் செய்த சாதனைக்காக அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தப்படவில்லையே என்ற வருத்தம் இருந்தது. அதனை இப்போது நான் வெளிப்படுத்துகிறேன்.
முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளின்படி எனது சொந்த முயற்சியில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது. அந்த விழாவில் அவரிடம் கட்சிக்காக (திமுகவுக்காக) பாடிய பாளையங்கோட்டை சிறையினிலே, கழகம் நல்ல கழகம் ஆகிய பாடல்களை பாடும்படி கேட்டுக் கொள்வேன் என்றார் மு.க.அழகிரி.












Click it and Unblock the Notifications