புலிகளை ஆதரித்தால் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் பாயும்- தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இயங்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தாலோ, செயல்பட்டாலோ, துண்டு அறிக்கை-சுவரொட்டிகள் வெளியிட்டாலோ, ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம் நடத்தினாலோ சட்டவிரோத நடவடிக்கை தடுப்புப் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
புலிகளை ஆதரித்துப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை கைது செய்யக் கோரி சட்டசபையில் நேற்று காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்து திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது.
இந் நிலையில் இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் சட்ட அமைச்சர் துரைமுருகன் ஒரு அறிக்கை படித்தார். அதன் விவரம்:
தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படும் போக்கு குறித்து நேற்று (29ம் தேதி) சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது அத்தகைய செயல்கள் பற்றி வழக்கறிஞர்கள் குழு அமைத்து, ஆராய்ந்து அதைத் தடுப்பதற்கு ஒரு சட்டம் கொண்டு வர வேண்டுமேயானால், அதற்கும் இந்த அரசு தயாராக இருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து இன்று காலையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நிதியமைச்சர் அன்பழகன், நான், தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி, அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி, உள்துறைச் செயலாளர், சட்டத்துறை செயலாளர், மாநில காவல்துறை டிஜிபி, புலனாய்வுப் பிரிவு எடிஜிபி ஆகியோர் கூடி விவாதித்தோம்.
இதற்காக புதிதாக சட்டம் கொண்டு வர வேண்டுமா அல்லது ஏற்கனவே உள்ள சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்க இயலுமா என்று ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இறுதியாக எடுக்கப்பட்ட முடிவு வருமாறு:
''தடை செய்யப்பட்டுள்ள எந்த இயக்கமாயினும் அவற்றுக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதோ, செயல்படுவதோ, துண்டு அறிக்கைகள், சுவரொட்டிகள் வெளியிடுவதோ, ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதம் போன்ற செயல்களில் ஈடுபடுவதோ, அவற்றில் கலந்து கொள்வதோ சட்டவிரோத நடவடிக்கை தடுப்புப் சட்டம் 1967 (37/1967) பிரிவின் கீழ் குற்றமாகும்.
அது போன்ற குற்றம் இழைப்போர் தனிப்பட்டவராயினும், சங்கம் அல்லது அமைப்புரீதியில் இயங்குவோராயினும் அவர்கள் அரசின் இந்த அறிவிப்பினை உரிய எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதையும் மீறி மேற்கண்ட நடவடிக்கைகள் ஏதேனும் ஒன்றில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது மேலே குறிப்பிட்டுள்ள சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications