7 நாள் குழந்தையை தண்ணீரில் அழுத்திக் கொன்ற தாய் கைது
சேலம்: பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தண்ணீர் பேரலுக்குள் அமுக்கி கொன்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம், அன்னதானப்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர்(27). இவரும் லீலாவதி(18) என்பவரும் கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் கர்ப்பமாக இருந்த லீலாவதிக்கு கடந்த 23ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின்னர் லீலாவதி தாய் வீட்டுக்குச் செல்லாமல், கணவருடனேயே இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்தக் குழந்தையைக் காணவில்லை. இதனால் அலெக்சாண்டரின் தாய், சகோதரிகள் உட்பட அனைவரும் தேடி பார்த்தபோது, வீட்டில் இருக்கும் தண்ணீர் பேரலுக்குள் குழந்தை பிணமாக மிதந்ததைப் பார்த்து அதிர்ந்தனர்.
உடனடியாக இது குறித்து அன்னதானப்பட்டி போலீசாரிடம் புகார் செய்தனர். அலெக்சாண்டர், அவர் மனைவி லீலாவதி மற்றும் குடும்பத்தாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் லீலாவதிதான் குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் லீலாவதியைக் கைது செய்தனர்.
போலீசாரிடம் லீலாவதி கொடுத்த வாக்குமூலத்தில், நான் அலெக்சாண்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் என் பெற்றோர் வீட்டில் எந்த உதவியும் செய்யவில்லை. பிரசவத்துக்கு ரூ.12,000 செலவு ஆனது. இந்தப் பணத்தைக் கட்டவே என் கணவர் படாதபாடுபட்டார்.
இந்நிலையில் குழந்தை பிறந்ததால், அவனை வளர்த்து படிக்க வைத்து, ஆளாக்க எங்களிடம் போதுமான வசதி இல்லை. அதனால் இரவு 9 மணியளவில் குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்கச் சென்றேன், மாமியாரையும் தூங்கும்படி கூறினேன்.
மாமியார் தூங்கிய பின்னர், இரவு 9-30 மணியளவில் வீட்டில் இருந்த தண்ணீர் பேரலுக்குள் குழந்தையை போட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் வந்து படுத்துக் கொண்டேன்.
பின்னர் குழந்தையைக் காணாமல் என் மாமியார் தேடியபோது, அவருடன் சேர்ந்து நானும் தேடினேன். சொத்து சண்டையை காரணம் காட்டி என் கணவரின் அக்காள் மீது இந்தப் பழியைச் சுமத்தவும் திட்டமிட்டிருந்தேன் என கூறியுள்ளார்.
பெற்ற குழந்தையை தாயே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications