நாலந்தா பல்கலை. போர்ட் மீட்டிங்கில் கலாம்
பாட்னா: சர்வதேச நாலந்தா பல்கலைக்கழகத்தின் முதல் போர்டு மீட்டிங்கில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பங்கேற்கவுள்ளார்.
பீகார் மாநில அரசு நாலந்தா சர்வதேச பல்கலைக்கழகத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான முதலாவது போர்டு கூட்டம் பிப்ரவரி 8ம் தேதி பாட்னாவில் நடைபெறுகிறது. இதில் கலாம் பங்கேற்கவுள்ளதாக மாநில மனித வள மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் அஞ்சனி குமார் சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பீகாரில் 2 நாள் பயணமாக கலாம் வருகை தரவுள்ளார்.
இந்த பயணத்தின்போது நாலந்தா பல்கலைக்கழகம் அமையவுள்ள இடத்தை அவர் பார்வையிடுகிறார். பின்னர் 9 பேர் கொண்ட போர்டு மீட்டிங்கிலும் அவர் பங்கேற்கிறார். பல்கலைக்கழகத்தின் உருவாக்கம் குறித்த திட்ட விவாதத்திலும் அவர் பங்கேற்கிறார்.
போர்டு தலைவராக குடியரசுத் தலைவரின் முன்னாள் ஆலோசகர் ஒய்.எஸ்.ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
நாலந்தா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்தது முதலே அதுதொடர்பான ஆய்வுகள், ஆலோசனைகளில் டாக்டர் ராஜன் பங்கேற்று வருகிறார். இதுதொடர்பான மசோதாவை உருவாக்கவும் அவர் முக்கிய காரணமாக இருந்தார்.
பல்கலைக்கழக போர்டை உருவாக்க மாநில அரசு ரூ. 1 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
மேலும் நிலம் வாங்குதவற்காக ரூ. 8.77 கோடி நிதியையும் மாநில அரசு ஒதுக்கியது என்றார் அவர்.
நாலந்தா பல்கலைக்கழகம் தொடர்பாக ஏற்கனவே சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் இரு ஆய்வுக் கூட்டங்கள் நடந்துள்ளன. 3வது கூட்டம் சீனாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.