புலிகளை ஆதரித்துப் பேசினால் தவறில்லை-நெடுமாறன்

சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது சட்டவிரோதமான செயல் அல்ல என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவது குற்றச் செயல் அல்ல. கடந்த அதிமுக ஆட்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கூட்டம் நடத்தியதற்காக ஜெயலலிதா அரசால் கைது செய்யப்பட்டார்.
ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் நிராகரித்து விட்டன.
விடுதலைப் புலிகள் போன்ற தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவிப்பது குற்றச் செயல் அல்ல என்று உச்சநீதிமன்றமே தெளிவாக கூறி விட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியும், அதிமுகவும் இதை பெரும் பிரச்சினையாக்கி சட்டசபையில் விவாதம் நடத்தி வருவது தேவையற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோருவதில் நியாயம் இல்லை.
இவர்களின் நெருக்குதலுக்குப் பணிந்து முதல்வர் கருணாநிதியும், புலிகளை ஆதரித்துப் பேசுவோரைக் கட்டுப்படுத்த தனிச் சட்டம் கொண்டு வரவும் தயார் என்று கூறியுள்ளார். இது ஜனநாயக விரோத செயல் என்பது தெள்ளத் தெளிவு என்று கூறியுள்ளார் நெடுமாறன்.












Click it and Unblock the Notifications