கேம்பஸ் இன்டர்வியூ: கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. கிடுக்கிப்பிடி
சென்னை: இனிமேல் 4ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு மட்டுமே கேம்பஸ் இன்டர்வியூ நடத்த அனுமதிக்கப்பட வேண்டும் என பொறியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்த சுற்றறிக்கையை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்குக் கீழ் வரும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் துணைவேந்தர் விஸ்வநாதன் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது 3வது ஆண்டு படிக்கும் மாணவர்களிடையே கேம்பஸ் இன்டர்வியூ நடக்கிறது. இதனால் சில பிரச்சினைகள் எழுகின்றன. இன்டர்வியூவில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர் படிப்பில் சரிவர கவனம் செலுத்துவதில்லை. மேலும் 4ம் ஆண்டு படிக்கும்போது வகுப்புகளுக்கு சரியாக வருவதில்லை.
இந்தக் குறைபாடுகள் குறித்து பல்வேறு மட்டத்தில் ஆலோசனைகள் நடத்தி தற்போது 4வது ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இறுதி ஆண்டு முடித்தவர்களுக்கு கோடை விடுமுறைக்குப் பின்னர்தான் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
3வது ஆண்டிலேயே பெரிய பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு தேர்வாகி விடும் மாணவர்களால், இறுதியாண்டு மாணவர்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்று மாணவர்களின் பெற்றோர்கள் பல்கலைக்கழகத்திற்கு சமீப காலமாக புகார்களை அனுப்பி வந்தனர். இந்த நிலையில்தான் புதிய சுற்றறிக்கையை அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.