கள்ளக்காதலனை கொன்ற பெண் கணவருடன் கைது
புதுச்சேரி: கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொலை செய்த பெண்ணையும், அவரது கணவரையும் புதுச்சேரி போலீஸார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் மரியதாஸ். இவரது மனைவி மேரி. மேரிக்கும், தஞ்சையைச் சேர்ந்த சுப்ரமணி (32) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
சமீபத்தில் மேரி, சுப்ரமணியுடன் ஓடி விட்டார். பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் மரியதாஸிடம் திரும்பி வந்தார். அவரும் மனைவியை மன்னித்து ஏற்றுக் கொண்டு குடும்பம் நடத்தினார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சுப்ரமணி மேரியின் வீட்டுக்கு வந்தார். அதன் பின்னர் பலத்த கத்திக் குத்து காயத்துடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். அவர்களிடம், மேரியும், மரியதாஸும், சுப்ரமணி மேரியை தன்னுடன் வந்து வாழுமாறு வற்புறுத்தியதாகவும், அவர் மறுத்ததால் தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் பிரேதப் பரிசோதனையின்போது சுப்ரமணியின் முதுகில் ஆழமான கத்திக் குத்து இருந்தது தெரிய வந்தது. இதனால் மேரி மற்றும் மரியதாஸ் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது.
இருவரையும் முறைப்படி அவர்கள் விசாரித்தபோது தாங்கள் தான் சுப்ரமணியைக் கொன்றதாக ஒத்துக் கொண்டனர்.
இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications