காதல் கோட்டை பாணியில் காதலியை கரம் பிடித்த வாலிபர்
தூத்துக்குடி: காதல் கோட்டை சினிமா பாணியில் போனிலேயே பேசி காதலித்த பெண்ணை தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் திருமணம் செய்துள்ளார்.
தூத்துக்குடி, முத்தம்மாள் காலனியைச் சேர்ந்தவர் ஜோசப் ராஜா (22). இவருடைய நண்பர் ஒருவர் கோவையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம்.
திருமணத்திற்கு பின்னர் தனது நண்பருடன் போனில் பேச முயன்ற போது தனது நண்பரின் மனைவியின் மூலம் அவரின் தோழியான ஷாலினி (22) என்பவரின் அறிமுகம் ராஜாவுக்கு கிடைத்துள்ளது.
ஷாலினி கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர். அவர் பேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார்.
முதல் முறை போனில் பேசும்போதே இருவரும் தங்கள் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர். பின்னர் காதல்கோட்டை சினிமா பாணியில் இருவரும் ஒருவரையொருவர் பார்க்காமல் போனிலேயே பேசி காதலிக்க ஆரம்பித்தனர்.
காதல் முற்றிய நிலையில் கடந்த 21ம் தேதி கோவைக்கு வந்த ஜோசப்ராஜா தனது காதலி ஷாலினியுடன் தூத்துக்குடிக்கு திரும்பினார். பெற்றோரின் சம்மதத்தை பெற்ற ஜோசப் ராஜா தூத்துக்குடி மகளிர் காவல் நிலையத்தில் ஷாலினியுடன் சென்று இருவரும் காதலிப்பதை கூறியுள்ளார்.
பின்னர் போலீசார் இருவீட்டாரின் பெற்றோர்களை அழைத்து பேசியதில் இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதனையடுத்து இருவரையும் பெற்றோர்கள் அழைத்து சென்று ரிஜிஸ்டர் அலுவலகத்தில் வைத்து பதிவு திருமணம் செய்து வைத்தனர்.
காலமெல்லாம் காதல் வாழ்க!












Click it and Unblock the Notifications