பெண்ணை எரித்து கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை
ராமநாதபுரம்: பெண்ணை எரித்துக் கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே சாம்பகுளத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் அந்தமானில் கடை வைத்துள்ளார். இவர் சொந்த ஊருக்கு வந்த போது உறவுக்கார பெண் லதா என்பவரோடு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இதனால் லதாவை திருமணம் செய்யக் கோரி அவரது தாயார், செல்வத்தை வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால், இதை செல்வம் விரும்பவில்லை.
இந் நிலையில் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி லதாவை செல்வம் அழைத்துக் கொண்டு வெளியே சென்றார். பின்னர் தனது நண்பர்கள் மங்களம், கருப்பையா ஆகியோருடன் சேர்ந்து லதாவை கழுத்தை நெரித்துக் கொன்றார்.
பின்னர் லதாவின் அடையாளம் யாருக்கும் தெரியாமல் இருக்க அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
லதா காணாமல் போனதால் விசாரணை நடத்திய போலீசார் இறுதியில் செல்வம், மங்களம், கருப்பையா ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் இந்த கொலை உறுதியானது.
இந்த வழக்கு ராமநாதபுரம் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட செல்வம், கருப்பையா, மங்களம் ஆகியோருக்கு ஆயுள் தண்டணையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.