எம்.ஆர்.எப். பல்டியால் குழப்பம்-தொழிற்சாலை திறப்பு தாமதம்
சென்னை: எம்.ஆர்.எப் ஆலையை இன்று முதல் திறப்பதாக அறிவித்த நிர்வாகம் திடீரென விரைவில் இதுதொடர்பாக இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்து விட்டது. இதனால் தொழிலாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த நிர்வாகத்தினர் நடத்தி வரும் டயர் ஆலை தான் எம்.ஆர்.எப். ( மெட்ராஸ் ரப்பர் பேக்டரி). இதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் கே.எம். மேமன் உள்ளார்.
திருவொற்றியூரில் இயங்கி வந்த இந்த தொழிற்சாலை கடந்த ஆண்டு மூடப்பட்டது. இதனால் அங்கு வேலை பார்த்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வந்தனர்.
ஆனால் மீண்டும் ஆலையை திறக்க எம்ஆர்எப் நிறுவனம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இதனால் தொழிலாளர்களின் நலன் கருதி, எம்ஆர்எப் தொழிற்சாலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அதில் பணியாற்றிய ஊழியர்களின் வாழ்க்கையைக் காக்க வேண்டும் என சட்டசபையில் பல கட்சி உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து முதல்வர் கருணாநிதி எம்ஆர்எப் நிறுவனம் மீண்டும் திறக்காவிட்டால் நாட்டுடைமை ஆக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து கே.எம். மேமன் தலைமையிலான எம்.ஆர்.எப் குழுவினர் நேற்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலையை இன்று முதல் திறக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தனர். இதனால் தொழிலாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் இன்று திடீரென ஆலை திறப்பை நிர்வாகம் ஒத்தி வைத்து விட்டது. இதற்கு காரணம், ஆலை மூடல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததுதான்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எம்ஆர்எப் தொழிற்சாலை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மூடப்பட்ட தொழிற்சாலையை திறக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்தனர்.
இன்று திறப்பதாக முதல்வரிடம் கூறி விட்டு விரைவில் இதுகுறித்து முடிவு அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் எம்.ஆர்.எப் கூறியுள்ளது தொழிலாளர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.