தென்காசி குண்டுவெடிப்புகள்-சிபிசிஐடி விசாரணை கோரும் தமுமுக
புளியங்குடி: தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகத்திலும் பஸ் நிலையத்திலும் நடந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என தமுமுக கோரிக்கை விடுத்துள்ளது.
புளியங்குடியில் தமுமுக மாணவரணி சார்பில் 10, 12 வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி குறித்த சிகரத்தை நோக்கி என்ற நிகழ்ச்சி தைக்கா நகராட்சி பள்ளியில் நடந்தது. நகர தமுமுக தலைவர் முகமது அலி தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி செயலாளர் அப்துல் சுபுகான் வரவேற்றார்.
இதில் தமுமுக மாநிலச் செயலாளர் அன்சாரி பேசியதாவது,
தென்காசியில் சுயநலத்திற்காக சில சமுக விரோத சக்திகள் தொடர்ந்து பிரச்சனைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்து முண்ணனித் தலைவர் ராமகோபாலன் மற்றும் பாஜக தலைவர்கள் அடிக்கடி தென்காசி வந்து, வதந்திகளை கிளப்பி பொதுமக்களின் அமைதியை சீர்குலைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் பாஜக, இந்து முண்ணனி முற்றிலுமாக பலமிழந்து விட்டதால் தென்காசியை மையமாக வைத்துக் கொண்டு தங்களது மதவாத செயல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்ததை பல தரப்பினரும் மூடி மறைத்து வருகின்றனர்.
செங்கோட்டை சேர்ந்த செல்லச்சாமியை என்பவரை போலீசார் 7 நாட்டு வெடிகுண்டுகளுடன் கைது செய்து 2 மணி நேரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த தீவிரம் ஏன். கடந்த 22ம் தேதி கைது செய்து 31ம் தேதிதான் போலீசார் பத்திரிக்கைகளுக்கு செய்தி கொடுத்தனர். கைது செய்யப்பட்ட செல்லச்சாமியை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்த மர்மம் என்ன என்பதை போலீசார் தெரிவிக்க வேண்டும்.
மேலும் வெடிகுண்டு தயாரிப்பது குறித்து இந்து முண்ணனித் தலைவர் ராமகோபாலன் கூறியிருப்பது குறித்து அவர் மேல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
தென்காசி சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணை தேவை என்பதை வலியுறுத்துகிறோம். தென்காசியில் போலீசார் விசாரணை என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். போலீசாரின் இந்த போக்கு தொடர்ந்து நீடித்தால் தமுமுக சார்பில் தென்காசியில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications