குஜராத்தில் தலித் மாணவி கற்பழிப்பு -8 ஆசிரியர்கள் கைது
பதான் (குஜராத்): குஜராத்தில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் தலித் மாணவியை கற்பழித்த 7 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு குஜராத்தில் உள்ள பதான் நகரில் ஆசிரியர் பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு படித்து வந்த தலித் வகுப்பு மாணவியை முன்னாள் முதல்வர் உள்ளிட்ட 8 ஆசிரியர்கள் கற்பழித்து விட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.
கற்பழிக்கப்பட்ட பெண் கர்ப்பமானதைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்தப் பெண் தற்போது கர்ப்பத்தைக் கலைக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் தவிர மற்ற எட்டு பேரும் பல்வேறு மாணவிகளை கற்பழித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளி முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் ஆத்திரமடைந்து கற்பழிப்புப் புகாரில் சிக்கிய ஆசிரியர்களை அடித்து உதைத்தனர். அதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
இதையடுத்தே போலீஸார் அங்கு விரைந்து சென்று நிலைமையை சரி செய்து ஆசிரியர்களைக் கைது செய்தனர்.
ஆசிரியர்கள் சஸ்பெண்ட்:
மாணவியை கற்பழித்த ஆசிரியர்கள் 6 பேரை குஜராத் மாநில அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் காலியாக உள்ள அந்த இடத்துக்கு பெண் ஆசிரியர்களை நியமிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்களால் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நஷ்டஈடாக ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.