பெங்களூர் ஓபன்: விலகல் ஏன்? - சானியா பரபரப்பு விளக்கம்!

பெங்களூரில் உலக மகளிர் டென்னிஸ் சங்க பெங்களூர் ஓபன் போட்டி நடைபெறுகிறது. இதில் வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபல வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
ஆனால் ஆசியாவின் நம்பர் ஒன் வீராங்கனையான சானியா மிர்ஸா இதில் கலந்து கொள்ளவில்லை. இதனால் டென்னிஸ் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தான் விலகியது குறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் சானியா கூறுகையில், பெங்களூர் ஓபன் போட்டியில் நான் விளையாடவில்லை. அங்கு விளையாட வேண்டாம். விளையாடினால் கடந்த காலங்களைப் போல இந்த முறையும் சர்ச்சைகள் எழலாம் என எனது மேனேஜர் அறிவுறுத்தியதால் நான் விளையாடவில்லை.
நான் எப்போதெல்லாம் இந்தியாவில் விளையாடுகிறேனோ, அப்போதெல்லாம் ஏதாவது பிரச்சினை எழுப்பப்பட்டு வருகிறது. எனவேதான் இந்தமுறை விளையாட வேண்டாம் என தீர்மானித்தேன்.
இது மிகவும் தீவிரமான ஒரு முடிவு அல்ல. என்னைச் சுற்றி நிறைய சர்ச்சைகள் எழுப்பப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட நிலையில் என்னால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியாது.
கடந்த சில வாரங்களில் நிறைய பிரச்சினைகளை சந்தித்து விட்டேன். இப்படிப்பட்ட நிலையில் விளையாட்டில் கவனம் செலுத்தி என்னால் விளையாட முடியாது. எனவேதான் விலகி விட்டேன் என்று கூறியுள்ளர் சானியா.
2005ம் ஆண்டு முதல் டென்னிஸில் பிரபலமாகி வருகிறார் சானியா. அது முதலே அவரைச் சுற்றி சர்ச்சைகளும் கூடவே ஒட்டிக் கொண்டுள்ளன.
ஆரம்பத்தில் அவர் டிரஸ் குறித்து இஸ்லாமிய பழமைவாதிகள் பிரச்சினை எழுப்பினர். பின்னர் அவரது சில கருத்துக்கள் பெரும் சர்ச்சையை எழுப்பின. சமீபத்தில் தேசியக் கொடியை அவமதித்து விட்டதாக வழக்குகள் தொடரப்பட்டன. விளம்பரப் படத்துக்காக ஹைதராபாத் மெக்கா மசூதியில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டதும் கூட சர்ச்சை ஆனது.
இப்படி தொடர்ந்து இந்தியாவில் அவரை நோக்கி சர்ச்சை அம்புகள் பாய்ந்த வண்ணம் இருப்பதால்தான் அப்செட் ஆகி பெங்களூர் ஓபன் போட்டியை சானியா புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது.
பெங்களூர் ஓபன் டென்னிஸ்: சானியா விளையாட மாட்டார்












Click it and Unblock the Notifications