அந்தமான் பெண்கள் பங்கேற்கும் தீவு அழகிப் போட்டி
போர்ட் பிளேர்: அந்தமான், நிக்கோபார் தீவுகளில், 'தீவு அழகிப் போட்டி' வருகிற 10ம் தேதி நடைபெறுகிறது.
அந்தமான், நிக்கோபாரைச் சேர்ந்த பெண்கள் மட்டும் இதில் கலந்து கொள்வார்கள். கடந்த 2003ம் ஆண்டு இது அறிமுகப்படுத்தப்பட்டது. 2வது முறையாக வருகிற 10ம் தேதி நடைபெறுகிறது.
17 வயது முதல் 30 வயது வரையிலான பெண்கள் இந்த அழகிப் போட்டியில் கலந்து கொள்ளலாம். கலை நிகழ்ச்சிகள், பேஷன் ஷோக்கள், மாநில சுற்று, பாரம்பரியச் சுற்று என பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறுகின்றன.
மாநிலச் சுற்றில், போட்டியில் பங்கேற்கும் பெண் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரோ அந்த மாநில பாரம்பரிய உடையில் வருவார்.
பெண்கள் தவிர ஆண்களும் கலந்து கொள்ளும் ஆணழகன் போட்டியும் நடைபெறும்.
போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று ஆண், பெண்களுக்கு முறையே ரூ.21,000, ரூ.15,000, ரூ.10,000 பரிசு அளிக்கப்படும். ஆறுதல் பரிசுகளும் உண்டு.
இந்த ஆண்டு போட்டியில் நிக்கோபார் தீவைச் சேர்ந்த 3 பழங்குடியினப் பெண்களும் கலந்து கொள்கிறார்கள். மற்றவர்கள் அனைவரும் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேரைச் சேர்ந்தவர்கள்.
அந்தமான், நிக்கோபார் தீவுகளின் கலாச்சாரத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதற்கு குந்தகம் ஏற்படாத வகையில், போட்டிகள் நடத்தப்படும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில் தம்பதிகளுக்கான மிஸ்டர் அண்ட் மிஸஸ் அந்தமான் போட்டியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.