சென்னை ஐஐடி இயக்குநருக்கு உயர்நீதமன்றம் நோட்டீஸ்
சென்னை: சென்னை ஐஐடி இயக்குநர் பதவியில் நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கூறி ஐஐடி இயக்குநர் டாக்டர் ஆனந்த்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில், நான் ஐஐடியில் பி.எச்.டி. முடித்துள்ளேன். டாக்டர் ஆனந்த் 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இயக்குநராக இருந்து வருகிறார்.
2007ம் ஆண்டு ஜூலை மாதம் மேலும் 5 ஆண்டுகளுக்கு அவர் இயக்குநராக நியமித்து மத்திய மனித வளத்துறை உத்தரவிட்டது.
இது ஐஐடி கவுன்சில் மற்றும் அதன் நிலைக்குழு ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரன்பாடானது. இந்த இரு குழுக்களின் ஒப்புதலையும் பெறாமல் ஆனந்த் மீண்டும் இயக்குநர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
ஆனந்த்தின் முதல் பதவிக்காலம் 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தது. அதன் பின்னர் அவர் முறைப்படி பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும். ஆனால் அப்போதைய பதிவாளர், எந்தவித அதிகாரமும் இல்லாத நிலையில், ஆனந்த்தின் பதவிக்காலத்தை 2007ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டித்து உத்தரவிட்டார். இது சட்டவிரோத செயலாகும்.
எனவே இயக்குநர் பதவியிலிருந்து ஆனந்த்தை நீக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கூறி ஆனந்த்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.