இன்று 24 யு.எஸ் மாநிலங்களில் வாக்கெடுப்பு - வெல்வாரா ஹில்லாரி?

சூப்பர் செவ்வாய் என அழைக்கப்படும் இன்றைய தினத்தில் அமெரிக்காவின் 50 மாகாணங்களில் 24 மாகாணங்களில் ஒரே நாளில் வாக்கெடுப்பு நடைபெறும். இந்த வாக்கெடுப்பின் மூலம் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது கிட்டத்தட்ட தெரிந்து விடும்.
இதையடுத்து அமெரிக்க வாக்காளர்களிடையே இன்றைய வாக்கெடுப்பில் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய வம்சவாளியினரின் வாக்குகளைக் கவரும் வேலையில் ஹில்லாரி கிளிண்டன் மும்முரமாக இறங்கியுள்ளார்.
இதற்காக அமெரிக்க அதிபர் ஆனால், இந்தியாவுடனான அமெரிக்க உறவை மேலும் பலப்படுத்தப் போவதாக அவர் உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானது. இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டால் பல்வேறு உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.
தீவிரவாதம், அணு ஆயுத ஒப்பந்தம் முதல் உலகமயமாக்கல் வரை பல்வேறு பிரச்சினகளில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.
இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் நான் புதியவள் அல்ல. ராஜீவ் காந்தி பவுண்டேஷன் நினைவு உரையில் நான் பேசியுள்ளேன். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நல்ல அறிமுகம் உள்ளது.
அமெரிக்க வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான சமுதாயமாக இந்தியர்கள் உள்ளனர்.
உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவும் பல விஷயங்களில் பொதுவான கருத்தைக் கொண்டுள்ளன. எனவே நான் அதிபரானால் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பை, உறவை மேலும் வலுப்படுத்த முயலுவேன் என்று கூறியுள்ளார் ஹில்லாரி.












Click it and Unblock the Notifications