உளவுத்துறை எச்சரிக்கையை மீறி யாத்திரையை தொடங்கினார் அத்வானி
டெல்லி: தற்கொலைப் படைத்தாக்குதல் நடைபெறலாம் என உளவுத்துறை எச்சரித்திருந்த போதிலும் திட்டமிட்டபடி தனது சங்கல்ப ரத யாத்திரையை பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று ஜபல்பூரில் தொடங்கினார்.
பாஜக மூத்த தலைவரும், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவருமான எல்.கே.அத்வானியை தற்கொலைப் படைத் தாக்குதல் மூலம் கொல்ல தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய
உள்துறை எச்சரித்தது.
இதையடுத்து மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரிலிருந்து திட்டமிடப்பட்டிருந்த சங்கல்ப ரத யாத்திரையை அவர் ஒத்தி வைக்க மத்திய அரசு கேட்டு கொண்டது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் அத்வானியை நேரில் சந்தித்து இதுகுறித்து விவாதித்தார்.
இதனால் பாஜக வட்டாரத்தில் அதிர்ச்சியும், பரபரப்பும்
ஏற்பட்டது. யாத்திரை ஒத்தி வைக்கப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதனை நேற்று மாலை பாஜக மேலிடமும் உறுதி செய்தது.
ஆனால் இன்று யாருமே எதிர்பாக்காத நிலையில் அத்வானி உளவுத்துறையின் எச்சரிக்கையை மீறி ஜபல்பூரில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார்.
யாத்திரையை தொடங்கிய அவர் தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு எப்போதும் அடிபணிய மாட்டோம் என கூறியுள்ளார். இந்த செய்தியை பாரதிய ஜனதா பொது செயலாளர் வெங்கையா நாயுடு உறுதி செய்துள்ளார்.
தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு பாரதிய ஜனதா ஒருபோது பயப்படாது எனவும், அத்வானியின் யாத்திரை குறிப்பிட்டபடி சாலை, ரயில் மற்றும் விமானம் மூலம் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.
அத்வானியின் பாதுகாப்பிற்காக அவர் செல்லும் இடங்களில் எல்லாம் வரலாறு காணாத பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ராணுவத்தினரும் இந்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்












Click it and Unblock the Notifications