மின் கம்பத்திலிருந்து தண்ணீர் கொட்டியதால் பரபரப்பு!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மின் கம்பத்திலிருந்து தண்ணீர் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி பங்களா தெருவில் இரும்பு குழாயால் ஆன மின்கம்பம் ஒன்று உள்ளது. நேற்று காலை 10.30 மணியளவில் இந்த மின்கமபத்தில் இருந்து குடிநீர் குழாய் போல் திடீரென தண்ணீர் கொட்ட தொடங்கியுள்ளது.
இதனால் திடுக்கிட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு நடத்தினர். அப்போது தண்ணீர் கொட்டியதற்கான காரணம் தெரிய வந்தது.
நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக மின்கம்பத்தின் மேல்பாகம் வழியாக தண்ணீர் நிரம்பி உள்ளது. குழாய் போன்ற அமைப்பில் அந்த மின்கம்பம் இருந்ததால் அதனுள் நீர் தேங்கியுள்ளது.
அதன் அழுத்தம் தாங்காமல் ஏற்கனவே துருப்பிடித்திருந்த அடிப்பகுதியில் துவாரம் ஏற்பட்டு அதன் வழியாக மழை நீர் குழாயில் இருந்து கொட்டியுள்ளது. இதையடுத்து அங்கு நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.
சுமார் 10 நிமிடத்திற்கும் மேலாக தண்ணீர் கொட்டியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications