நெருப்பு மூட்டி அதில் குதித்து மூதாட்டி தற்கொலை!
திருவனந்தபுரம்: கேரளாவில் 88 வயது மூதாட்டி, சிதையை மூட்டி அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ளது வெஞ்சரமூடு கிராமம். இப்பகுதியைச் சேர்ந்தவர் கோமதி அம்மா. 88 வயதாகும் அவருக்கு புற்று நோய் இருந்து வந்தது. இதனால் பெரும் அவதிப்பட்டு வந்தார் கோமதி அம்மா.
இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டுக்கு அருகே மரக் கட்டைகளை அடுக்கி வைத்து அதில் தீ மூட்டினார். பின்னர் அதில் குதித்தார். சிறிது நேரத்திலேயே கோமதி அம்மாள் தீயில் கருகி பரிதாபமாக இறந்து போனார்.
அந்த சமயத்தில் கோமதி அம்மாவின் பேரன் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார்.
அக்கம் பக்கத்தினர் தீ எரிவதைப் பார்த்து விரைந்து வந்தனர். அப்போது கோமதி அம்மாளின் உடல் கருகிய நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தனர்.
புற்று நோயின் தாக்கத்தைப் பொறுக்க முடியாமல்தான் கோமதி அம்மா இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
88 வயது மூதாட்டியின் இந்த பரிதாப சாவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.