ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் வேலை நிறுத்த எச்சரிக்கை
மதுரை: ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ரயில் நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்க செயலாளர் கண்ணையா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ரயில்வே தொழிலாளர்களுக்கு ஊதியம், பி.எஃப் பணம் போன்றவற்றை வங்கிகள் மூலமாக வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பணம் கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். எனவே தொழிலாளர்களுக்கு எப்போதும்போல பணமாகவே வழங்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை விரைவில் மத்திய அரசுக்கு வழங்க உள்ளது. இதற்கு லோக்சபாவில் அனுமதி கிடைத்தும், தொழிலாளர்களுக்கு 1.1.2006 முதல் உள்ள நிலுவைத் தொகை, போனஸ் உச்ச வரம்பு, 3 பதவி உயர்வு ஆகியவற்றை வழங்க வேண்டும்.
ரயில்வே தொழிலாளர்களின் இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் வரும் மார்ச் மாதம் அகில இந்திய அளவில் மஸ்தூர் யூனியன் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
மேலும் ரயில்வே என்ஜின் டிரைவர், கார்டுகள் போன்ற பிரிவில் ஆட்குறைப்பை ரயில்வே கைவிட வேண்டும்.
தெற்கு ரயில்வேயில் சுமார் 3,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை அரசு உடனே நிரப்ப வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications