மதுக் கடையை மாற்றக் கோரி பெண்கள் போராட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூடக் கோரி 15 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செங்காடு கிராமத்தில் மதுக் கடை உள்ளது. குடியிருப்புகளுக்கு மத்தயில் இந்தக் கடை உள்ளதால், இங்கு குடிக்க வருவோர் தினசரி பல்வேறு ரகளைகளில் ஈடுபடுவது வழக்கமாகி விட்டது.
ஆபாசமாக பேசுவது, பெண்களைப் பார்த்து கிண்டல் செய்வது என குடிமக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து நேற்று மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.
உடனடியாக விரைந்து வந்த போலீஸார், கடையை வேறு இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்யப்படும் என சமாதானம் கூறி பெண்களை கலைந்து போகச் செய்தனர்.