பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியதால் வீட்டை விட்டு ஒடிய மாணவி
திண்டுக்கல்: பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் வீட்டை விட்டு ஒடிய மாணவியை போலீசார் மீட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுக்கா அருகே சீத்தாப்பட்டியில் வசிப்பவர் ராமசாமி. இவரது மகள் ராஜேஸ்வரி (13). இவர் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.
ராஜேஸ்வரி அடிக்கடி பள்ளி செல்லாமல் விடுமுறை எடுத்து வந்துள்ளார். இதனால் அவரை பள்ளிக்கு செல்ல அவரது பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர்.
பெற்றோர் பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியது பிடிக்காமல், ராஜேஸ்வரி வீட்டில் இருந்து ரூ.100ஐ எடுத்துக் கொண்டு பஸ் ஏறி, வடமதுரை சென்றுள்ளார்.
பேருந்து நிலையம் அருகில் மாணவி தனியாக நின்று கொண்டிருந்தது குறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருதவள்ளி விரைந்து சென்று அந்த மாணவியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார். பின்னர் ராஜேவரியிடம் விசாரணை நடத்தி அவரின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் ராஜேஸ்வரியை அவரின் பெற்றோர்கள் வந்து அழைத்து சென்றனர்.