பெண் எஸ்ஐயை கண்டித்து மாணவர்கள் திடீர் மறியல்
நெல்லை: நெல்லையில் பெண் சப்-இன்ஸ்பெக்டரைக் கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நெலலை சட்டக் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அமிர்தராஜ், ஜெயமுருகன் ஆகியோர் நேற்று காலை பாளை மார்க்கெட்டில் இருந்து ஒரு தனியார் பேருந்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
படிகட்டில் பயணம் செய்த அவர்களை அதே பஸ்சில் வந்த பெண் எஸ்ஐ ஒருவரும், பஸ் கண்டக்டரும் உள்ளே வருமாறு கூறினர். ஆனால், கூட்டம் அதிகமாக உள்ளது. எப்படி வரமுடியும் என்று கேட்கவே இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பெண் எஸ்ஐயும், கண்டக்டரும் அவர்களை சட்டையை பிடித்து தள்ளியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து இரு மாணவர்களும் சக மாணவர்களிடம் தெரிவிக்கவே இதையடுத்து வகுப்புகளை புறக்கணித்து விட்டு வெளியே வந்த மாணவர்கள் பெண் எஸஐ மற்றும் பஸ் கண்டக்டரை கண்டித்து பாளையங்கோட்டை-திருச்செந்தூர் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் மாநகர துணை கமிஷனர் தினகரன், உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பெண் எஸ்ஐ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர். பின்னர் போலீசார் மாணவர்களை சமாதானம் செய்தபிறகு மாணவர்களை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.