இந்தோனேசியாவில் 3 இடங்களில் நிலநடுக்கம்
ஜகார்தா: இந்தோனேசியாவில் 3 இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பயந்து வீதிகளில் ஓட்டம் பிடித்தனர்.
இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் சுலோவகி தீவில் நேற்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பெரியளவில் சேதம் ஏற்படவில்லை. ஆனால் கட்டடங்கள் பயங்கரமாக ஆடியதால் மக்கள் உயிருக்கு பயந்து வீதிகளில் ஓட்டம் பிடித்தனர்.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.
இதே போல் இன்று அதிகாலை 2-30 மணியளவில் பாலி தீவில் உள்ள டென்பகார் என்ற இடத்திற்கு அருகே கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் அப்பகுதியில் இருந்த சில வீடுகள் சேதமடைந்தன. கடலோரப் பகுதி என்பதால் மக்கள் சுனாமி வந்து விடுமோ என்ற பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவு கோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.
இது நடந்த சிறிது நேரத்திலேயே சம்பாவா தீவு பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் இதனால் பெரியளவில் சேதங்கள் ஏதும் நிகழவில்லை.
இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.1 ஆக பதிவாகியுள்ளது.
2 நாட்களுக்குள் அடுத்தடுத்து இந்தோனேசியாவில் 3 இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டு மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.