'நானோ'வுக்கு போட்டியாக மாருதி செர்வோ!

கடந்த மாதம் மக்கள் கார் என வர்ணிக்கப்பட்ட டாடாவின் ரூ. 1 லட்சம் மதிப்பிலான நானோ காரை அறிமுகப்படுத்தினார் டாடா குழும அதிபர் ரத்தன் டாடா.
உலகின் விலை குறைந்த முதலாவது கார் என்ற பெருமையும் நானோவுக்குக் கிடைத்தது. ஆனால், இதற்கு போட்டியாக நாங்கள் எந்தக் காரையும் அறிமுகப்படுத்தப் போவதில்லை என மாருதி உள்ளிட்ட பிற கார் நிறுவனங்கள் கூறி வந்தன.
வெளியில் தான் இவ்வாறு கூறுகின்றனரே தவிர உள்ளூர பயம் ஆட்ட ஆரம்பித்துவிட்டது. நானோவை டாடா அறிமுகப்படுத்திய மறு தினத்தில் இருந்தே மாருதி 800 காருக்கான புக்கிங்குகள் மடமடவென சரிய ஆரம்பித்துவிட்டது.
5 மாதம் காத்திருந்து நானோவை வாங்கலாம் என மக்கள் கருத ஆரம்பித்துவிட்டனர். இந்த சரிவு இப்போதைக்கு நிற்காது என்பதை மாருதி உடனடியாக உணர்ந்து கொண்டுவிட்டது.
இதையடுத்து மாருதி நிறுவனமும் ரூ. 1 லட்சம் மதிப்பிலான காரை களத்தில் இறக்கவுள்ளது.
மாருதியின் பார்ட்னரான சுசுகி மோட்டார் நிறுவனம் சமீபத்தில் ஜப்பானில், செர்வோ (Cervo) எனப்படும் சிறிய ரக காரை அறிமுகப்படுத்தியது. 600 சிசி என்ஜின் கொண்ட இந்த காரின் வேகம் மாருதி ஆல்டோ, மாருதி 800, வேகன் ஆர் ஆகியவற்றை விட அதிகமாகும்.
ஜப்பானின் 4 ஸ்டார் தர கட்டுப்பாட்டை செர்வோ பூர்த்தி செய்கிறது. இந்த காரையே சில மாற்றங்களைச் செய்து (விலை குறைவான பொருட்களை பயன்படுத்தி) இந்திய மார்க்கெட்டிலும் இறக்க முடிவு செய்துள்ளது மாருதி சுசுகி நிறுவனம்.
மாருதியின் புதிய குட்டிக் காரின் விலையும் நானோ காருக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் வகையில் இருக்கும் என்றும் தெரிகிறது.
புதிய கார் குறித்து மாருதி நிறுவன விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குநர் சுஜி ஓயிஷி கூறுகையில் புதிய மினி கார், 800 சிசி காரை விட குறைவான என்ஜின் திறனுடையதாக இருக்கும். எங்களது புதிய கார், மற்ற எந்தக் காரையும் விட எரிபொருள் சிக்கனத்துடன் கூடியதாக இருக்கும் என்றார்.
இந்த கார் 660 சிசி பெட்ரோல் என்ஜினும், 50 பிஎச்பி திறனும் உடையதாக இருக்குமாம். டாடாவின் நானோ 700 சிசி பெட்ரோல் என்ஜினுடன், 30 பிஎச்பி திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் மாத இறுதியில், நானோ விற்பனைக்கு வரவுள்ளது. மாருதியும் தனது புதிய காரை 2008ம் ஆண்டுக்குள்ளேயே (பெரும்பாலும் டிசம்பரில்) சந்தையில் கொண்டு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல பஜாஜ் மோட்டர் சைக்கிள் நிறுவனமும் குட்டி கார் தயாரிப்பில் இறங்கப் போவது குறிப்பிடத்தக்கது.
குட்டி கார்களின் வருகையால் இந்திய சாலைகளும் மேலும் குட்டியாக சுருங்கப் போவது மட்டும் நிச்சயம்.












Click it and Unblock the Notifications