பழ.நெடுமாறன் மாநாட்டுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மதுரை: தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நெல்லையில் நடத்தவிருந்த தமிழர் உரிமை மாநாட்டை நடத்த அனுமதி கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்துவிட்டது.
மக்கள் உரிமை அமைப்பின் சார்பில் நெல்லையில் 10ம் தேதி தமிழர் உரிமை மாநாட்டை நடத்த அதன் ஒருங்கிணைப்பாளரான பழ.நெடுமாறன் ஏற்பாடு செய்திருந்தார்.
ஆனால் இந்த மாநாட்டுக்கு திடீரென்று போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து மாநாட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நெடுமாறன் மனு தாக்கல் செய்தார்.
அதில், கடந்த 2000ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் உரிமையை காக்க இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பின் சார்பாக கடலூரில் பிப்ரவரி 2ம் தேதியும், நெல்லையில் வரும் பிப்ரவரி 10ம் தேதியும் நடத்தப்படவிருந்த மாநாடுகளுக்கு கடைசி நேரத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பட்டினியால் வாடும் தமிழர்களின் நலன் காக்க பல இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மருந்து மற்றும் உணவு பொருட்களை அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள் சப்ளை செய்யக் கூடாது. இரு நாடுகளிம் கூட்டு வான் ரோந்து செல்வதை நிறுத்த வேண்டும்.
மக்கள் உரிமை அமைப்பின் கடலூர் மாவட்ட அமைப்பாளர் தமிழீழன், கடலூரில் நடைபெறும் மாநாட்டிற்கு அம்மாவட்ட டிஎஸ்பியிடம் ஜனவரி 7ம் தேதி அனுமதி கேட்டார்.
ஆனால் போலீசார் எந்த காரணமும் இல்லாமல் அனுமதி கேட்ட விண்ணப்பத்தை ஜனவரி 30ம் தேதி நிராகரித்து விட்டனர்.
அதன் பின்னர் நெல்லையில் நடைபெறவிருந்த மாநாட்டிற்கு போலீசார் அனுமதி கொடுத்தனர். மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பின்னர் மாநாட்டை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த நெல்லை மாநாட்டை நடத்த அனுமதி தரவேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி மோகன்ராம் விசாரித்தார். பின்னர், மனுதாரரின் விண்ணப்பம் இன்னும் நெல்லை காவல்துறை ஆணையரின் பரிசீலனையில் உள்ளது. அது நிராகரிக்கப்படவில்லை. இந்த நிலையில் கோர்ட் அதில் தலையிட முடியாது.
ஒரு வேளை மனுதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், நீதிமன்றத்தை அவர் அணுகலாம் என்று கூறி நெடுமாறனின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டார்.












Click it and Unblock the Notifications