கத்திக் குத்தில் முடிந்த ஆம்லெட் தகராறு!
சென்னை: ஆம்லெட் சரியாக போடாதது குறித்து கேட்ட கணவர் மீது கோபம் கொண்ட மனைவி, கணவரை கத்தியால் குத்திக் காயப்படுத்தினார். அந்த பெண்மணியை போலீஸார் கைது செய்தனர்.
அந்தப் பெண்ணின் பெயர் கவிதா. பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவரது கணவர் ரவி.
நேற்று இரவு வீட்டில் கணவருக்கு சாப்பாடு பரிமாறியுள்ளார் கவிதா. அப்போது, ரவி ஆம்லெட் கேட்டார். ஆனால் தான் டயர்ட் ஆக இருப்பதாக கூறிய கவிதா, போட முடியாது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து மனைவியை திட்டியுள்ளார் ரவி. இருவருக்கும் கடும் சண்டை ஏற்பட்டது. பின்னர் சரி போட்டுத் தருகிறேன் என்று கூறிய கவிதா, அதற்காக வெங்காயத்தை நறுக்க ஆரம்பித்தார்.
அப்போது மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த கவிதா, தனது கையில் இருந்த கத்தியால் கணவரின் நெஞ்சில் ஓங்கிக் குத்தினார். இதில் ரவி நிலை குலைந்து கீழே விழுந்தார்.
அவரது அலறல் சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து கவிதாவைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications