வட இந்தியர்கள் மீது ராஜ் தாக்கரே மீண்டும் பாய்ச்சல்

சில நாள் மெளனத்திற்குப் பின் நேற்று மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராஜ் தாக்கரே. இந்த செய்தியாளர்கள் கூட்டத்திற்கு மராத்தி செய்தியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்தி டிவி சேனல்களின்
செய்தியாளர்கள், வீடியோகிராபர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் வட இந்தியர்களுக்கு எதிரான தனது நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்தினார் ராஜ் தாக்கரே.
மீண்டும் தாக்குவோம்:
பேட்டியின்போது அவர் கூறுகையில், மராத்தி மக்களின் பெருமையைப் பாதிக்கும் வகையில் உ.பி அல்லது பீகார் மாநிரத் தலைவர்கள் பேசினாலோ அல்லது அறிக்கைகள் விட்டாலோ, மும்பையில் வட இந்தியர்கள் மீதான தாக்குதலை மீண்டும் தொடங்குவோம்.
மும்பையில் வட இந்தியர்கள் மீதான தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பல்ல. உ.பி., பீகார் தலைவர்களின் பேச்சால் ஏற்பட்ட பின் விளைவுகள்தான் இது.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அபு அஸீம் ஆஸ்மி, உ.பியிலிருந்து 20 ஆயிரம் ஆட்களைக் கூட்டி வந்து தடிகளைக் கொடுக்கப் போவதாக கூறியுள்ளார். அவர் வரட்டும், தடிகளைக் கொடுக்கட்டும். நாங்கள் மராத்தியர்களிடம் வாள்களைக் கொடுப்போம்.
இதுபோன்ற பேச்சுக்களை எல்லாம் இனிமேல் மராத்தியர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
மும்பையில் தங்கியுள்ள வட இந்தியர்களுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்கள் மகாராஷ்டிராவையும், மராத்தியர்களையும் மதிக்க வேண்டும்.
வெளி மாநிலங்களைச் சேர்ந்த யாரும் இனிமேல் மும்பையில் நுழைய அனுமதிக்கப்படக் கூடாது. ஏற்கனவே இருப்பவர்கள் மராத்தியர்களை மதித்து நடக்க வேண்டும். மராத்திய கலாச்சாரத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும்.
தென்னிந்தியர்களுக்குப் பாராட்டு:
மும்பையில் தென்னிந்தியர்கள், குஜராத்திகள், பஞ்சாபிகளும்தான் வசிக்கிறார்கள். தாங்கள் வாழும் மும்பைக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள். இவர்களால் நாட்டுக்கும் பெருமை. உள்ளூர் மக்களை மதித்து, அனுசரணையுடன் நடந்து கொள்கிறார்கள். தங்களது மாநிலங்கள் உருவாக்கப்பட்ட தினத்தை இவர்கள் ஒருபோதும் கொண்டாடியதில்லை.
தமிழர்களும், பார்சி இனத்தவரும், குஜராத்திகளும் தங்களது மாநில தலைவர்களை அழைத்து ஆடம்பரமாக எதையும் செய்வதில்லை. ஆர்ப்பாட்டம் செய்வதில்லை.
மகாராஷ்டிராவின் கலாச்சாரம் குறித்தும், மராட்டியர்களின் வாழ்க்கை முறை குறித்தும் மும்பை மாநகராட்சியும், மாநில அரசும், மக்களுக்கு கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் ஒருபோதும் முன்ஜாமீன் பெற மாட்டேன். அரசு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். கைது செய்தால் செய்து கொள்ளட்டும்.
குண்டர்கள்:
வட இந்திய குண்டாயிஸத்தை ஒழிக்காமல் நான் ஓய மாட்டேன். கடந்த காலங்களில் இந்த கும்பலால் மராத்தியர்கள் பட்ட வேதனைகள்தான் இன்று பொங்கி வெடித்துள்ளன. மராத்தியர்களையும், மராத்திய கலாச்சாரத்தையும் நசுக்கத் துடிக்கும் உ.பி, பீகார் மாநிலத்தவரை இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாமல் இல்லை. அது கூடத் தெரியாத முட்டாள் இல்லை நான்.
சாத் பூஜையை பெரிய பூஜையாக இந்திக்காரர்கள் கூறுகிறார்கள். உண்மையில், இந்தப் பூஜையை நடத்தி, தங்களது பலத்தைக் காட்டி, மராத்திய கலாச்சாரத்தை நசுக்கத்தான் அவர்கள் நினைக்கிறார்கள்.
சாத் பூஜையின்போது கங்கையில்தான் புனித நீராடுவார்கள். அவர்களுக்கு அரபிக் கடலில் என்ன வேலை?
இது குண்டாயிஸம். இந்த தாதாயிசத்தை நான் அனுமதிக்க மாட்டேன். மராத்தியர்களின் கலாச்சாரத்தை நசுக்க நினைப்போர் அதற்கான விலையைத் தந்தாக வேண்டும்.
அமிதாப் பச்சன் போன்ற பெரியவர்கள் தங்களது சொந்த மாநிலத்தின் மீது பாசமாக இருக்கும்போது, ராஜ் தாக்கரே போன்ற சிறியவன், தனது கலாச்சாரத்தின் மீதும், மொழி மீதும் பாசம் காட்டக் கூடாதா? என்றார் ராஜ் தாக்கரே.
வட இந்தியர்கள் மீது ராஜ் தாக்கரே மீண்டும் பாய்ந்துள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications