ஆளெடுக்கும் இலங்கை ராணுவம்
கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான போரை உக்கிரப்படுத்தியிருக்கும் இலங்கை ராணுவம், புதிதாக வீரர்களைத் தேர்வு செய்யும் பணியை முடுக்கி விட்டுள்ளது.
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. புலிகளின் பல பகுதிகளை கைப்பற்றி விட்டதாகவும், வடக்கில் இரு மாவட்டங்களில் மட்டுமே விடுதலைப் புலிகள் ஆதிக்கம் இருப்பதாகவும் இலங்கை அரசு கூறி வருகிறது.
எனவே பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை விட்டு விட்டு சரணடைய வேண்டும் என இலங்கை ராணுவம் கூறி வருகிறது.
இந்த நிலையில் புலிகளுடனான சண்டையை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக புதிதாக வீரர்களைத் தேர்வு செய்யும் பணியில் இலங்கை ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக புலிகளின் முக்கிய கேந்திரமான வன்னிப் பகுதியில் சண்டையை தீவிரப்படுத்தும் பொருட்டு அதிக அளவில் புதிய வீரர்களைத் தேர்வு செய்து வருகிறது ராணுவம்.
இந்த ஆண்டுத் தொடக்கம் முதல் இதுவரை 3000 புதிய வீரர்கள் ராணுவத்தில் சேர்ந்துள்ளதாக ராணுவச் செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மொத்தம் 34 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டனர். இதன் மூலம் ராணுவ வீரர்களின் பலம் 1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்தது. தற்போது மொத்தம் 2 லட்சம் பேர் இலங்கை ராணுவத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, வட மேற்கில் தற்போது கடும் சண்டை நடந்து வரும் மன்னார் பகுதியில் உள்ள நிலவரத்தை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேரில் சென்று பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications