யாருடன் கூட்டணி இல்லை, தனித்தே போட்டி-விஜயகாந்த்
கோவில்பட்டி: நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது. மக்களுடன் மட்டும்தான் கூட்டணி அமைக்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்த்துடன் அரசியல் பேசினேன் என்று தமிழக காங்கிரஸ் கட்சிக்கான மேலிடப் பொறுப்பாளர் அருண்குமார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில் கோவில்பட்டியில் தேமுதிக பிரமுகரின் திருமண விழாவில் கலந்து கொண்ட விஜயகாந்த் பேசுகையில்,
யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டேன் என ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறேன். மக்களுடன் மட்டும்தான் நான் கூட்டணி வைப்பேன். வேறு யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டேன். எம்பி தேர்தலில் தேமுதிக தனித்துதான் போட்டியிடும். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வாக்களித்து என்னை வெற்றிபெற செய்யுங்கள்.
ஆளும் கட்சியினரின் பேனர்களை பாதுகாப்பதுதான் போலீசாரின் வேலையாக உள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. தர்மபுரியில் போலீசாரின் துப்பாக்கி மற்றும் வாக்கி டாக்கியை காவல் நிலையம் புகுந்து எடுத்து சென்றுவிட்டனர்.
காவிரி பிரச்சனை இதுவரை தீர்க்கப்படவில்லை. நதிகள் இணைப்பு பிரச்சனை தீர்க்கப்படவில்லை. தமிழகத்தில் மின்சாரம் இல்லை. கேட்டால் காற்றாலை, தண்ணீரில் மின் உற்பத்தி இல்லை என்கின்றனர். நிலக்கரி உற்பத்தியை அதிகரித்து மின்தட்டுப்பாட்டை சமாளிக்கலாமே.
கடந்த 2 வருடங்களுக்கு முன் சிமெண்ட் 1 மூடை ரூ.158 ஆக இருந்தது. ஆனால் தற்போது ரூ.240 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வர் ரூ.200க்கு மலிவு விலையில் சிமென்ட் வழங்க உத்தரவிட்டார். ஆனால் இந்த மலிவு விலை சிமெண்டை வாங்க அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டிய லஞ்சத்தையும் கணக்கிட்டால் ரூ.240 ஆகி விடுகிறது.
விலைவாசி உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். கூட்டணியில் இருந்து கொண்டு இவ்வாறு கம்யூனிஸ்ட் கட்சியினர் போராடுவதைவிட கூட்டணியில் இருந்து வெளியில் வரவேண்டியது தானே.
நாம் எல்லா மொழிகளையும் கற்றால் தான் வேலை வாய்ப்பு எளிதில் கிடைக்கும். அதனால் தாய் மொழியை காப்போம். பிறமொழியை கற்போம்.
திமுக அடுத்தமுறை ஆட்சிக்கு வர முடியாது என்று நினைத்து கோடி கோடியாக கொள்ளையடிக்கின்றனர். நான் மக்களிடம் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை. மக்களுக்கு செய்கிறேன்.
ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கும் ஏழைகள் குறித்து கணக்கெடுத்து அவர்களுக்கு டிவி வழங்கலாம். சட்டசபையில் கூட இலவச கலர் டிவிக்கு பதிலாக வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கலாம் என்று கேட்டேன். ஆனால் அதற்கு பதில் இல்லை என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications