2010ல் தேர்தல் நடத்தப்படும்-மியான்மார் ராணுவம் சொல்கிறது
பாங்காக்: பல ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடந்து வரும் மியான்மாரில் (பர்மா) வரும் 2010ம் ஆண்டில் தேர்தல் நடத்தப்படும் என்றும், மீண்டும் ஜனநாயக ஆட்சி நிலை நாட்டப்படும் என்றும் அந் நாட்டு ராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர். ஆனால், இதை நம்ப பெரும்பாலான நாடுகள் தயாராக இல்லை.
ராணுவ ஆட்சியின் கீழ் சமூக, பொருளாதாரரீதியில் நாடு வெற்றி கண்டுவிட்டதால் வரும் 2010ம் ஆண்டில் பல கட்சிகள் பங்கேற்கும் தேர்தலை நடத்த தயாராக இருக்கிறோம், ஜனநாயக ஆட்சிக்கான நேரம் வந்துவிட்டது என ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
உலகிலேயே மிக ஏழ்மையான நாடுகளில் பர்மாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு மியான்மாருக்கு உலக அளவில் நெருக்குதல் அதிகரித்து வருவதால் ஒரு திசை திருப்பல் நாடகமாக இந்த அறிவிப்பை ராணுவம் வெளியிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
மியான்மாரின் ஜனநாயகப் போராளி ஆன் சான் சூ கி தொடர்ந்து வீட்டுச் சிறையில் தான் இருந்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த தேர்தலில் அவர் வென்றார். ஆனால், அவரிடம் ஆட்சியை ஒப்படைக்காத ராணுவம் அவரை சிறையில் தள்ளியது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications