வீரப்பனுக்கு மணிமண்டபம் கட்டும் முத்துலட்சுமி
உளுந்தூர்பேட்டை: சந்தன கடத்தல் வீரப்பனுக்கு மணி மண்டபம் கட்டும் பணியில் அவனது மனைவி முத்துலட்சுமி ஈடுபட்டுள்ளாராம்.
அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி உளுந்தூர்பேட்டையில் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
என் கணவரைத் தேடுவதாக கூறிக்கொண்டு காட்டுக்குச் சென்ற தமிழ்நாடு மற்றும் கர்நாடக அதிரடிப்படையினர் அங்கிருந்த மலைவாழ் மக்களையும், பெண்களையும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி துன்புறுத்தினர்.
அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதுடன் தவறு செய்த காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைகளில் வாழும் மக்கள் காடுகளையே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் தற்போது அந்த மக்களை அங்கிருந்து அகற்றிவிட்டு வனத்துறையினரின் உதவியுடன் அரசியல்வாதிகளும், பெரும் பணக்காரர்களும் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். எனவே வன மசோதா சட்டத்தை அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
என் கணவரின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து புத்தமாக வெளியிட உள்ளேன். அப்போது மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிவரும். மேலும் எனது கணவர் புதைக்கப்பட்ட இடத்தில் மணி மண்டபம் கட்டும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளேன். அதற்கான அடிக்கல் நாட்டுவிழா விரைவில் நடக்கும்.
எங்களது மலைவாழ் மக்கள் உரிமை இயக்கம் ஆதிவாசிகள் மேம்பாட்டுப் பணியிலும், அவர்களின் உரிமைகளை மீட்கும் பணியிலும் தொடர்ந்து செயல்படும் என்றார் முத்துலட்சுமி.












Click it and Unblock the Notifications