சென்னையில் வெளி மாநிலத்தவர்கள் கண்காணிப்பு
சென்னை: சென்னையில் வசிக்கும் வெளி மாநிலத்தவர்கள் மீது போலீஸார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிற மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வந்து தங்கியிருப்போர் மீது போலீஸார் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்களா என்பது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பான உத்தரவு அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தங்கியிருக்கும் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினரை தீவிரமாக கண்காணிக்கும்படி போலீஸாரை அறிவுறுத்தியுள்ளோம்.
பல வெளிநாட்டு நிறுவனங்கள் சென்னையில் தங்களது அலுவலகங்களை அமைத்துள்ளனர். இந்த நிறுவனங்களின் கட்டுமான் பணி உள்ளிட்டவற்றில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். எனவேதான் வெளி மாநிலத்தவர் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு குற்றச் செயல்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2 மாதங்களில், தீவிர கண்காணிப்புகாரணமாக, 124 வழக்குகளில் முடிவு தெரிய வந்துள்ளது. பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 148 கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பொருட்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செயய்ப்பட்டுள்ளது.
அதேபோல, ரூ. 3 கோடி மதிப்புள்ள திருட்டு விசிடிக்களும், கம்ப்யூட்டர்களும் போலீஸ் வேட்டையில் சிக்கியுள்ளது.
காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு போலீஸார் இடையூறாக இருக்க மாட்டார்கள். அதேசமயம், அத்துமீறுவோர், பொது இடங்களில் தவறாக நடந்து கொள்வோர் மீது மட்டுமே நடவடிக்கை எடுப்பார்கள் என்றார் நாஞ்சில் குமரன்.